கூட்டணிக்கு அச்சாரம்.. இன்று மநீம செயற்குழு.. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? அறிவிப்பாரா கமல்ஹாசன்?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று முன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், கமல் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியும், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் களமிறங்குகின்றன.
மேலும், தேமுதிக, நாதக ஆகிய கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த இடைத்தேர்தல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று மநீம செயற்குழு கூட்டம் நடக்கிறது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணியினரும், கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். அதிமுகவின் இரு அணிகளிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

ஓபிஎஸ் - எடப்பாடி ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் சேலத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதேபோல, சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். வேட்பாளர் தேர்வு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

கமல் முடிவு?
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன முடிவெடுப்பார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக பயணிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமல்ஹாசன் பங்கேற்றிருந்தார்.

வேட்பாளர் சந்திப்பு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று முன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். முன்னதாக, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இன்று செயற்குழு கூட்டம்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கமல்ஹாசன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி உறுதி
பெரும்பாலும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிக்கும் முடிவையே கமல்ஹாசன் எடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் இணைவதை கமல்ஹாசன் உறுதி செய்வார் எனக் கருதப்படுகிறது. இதனால், கமலின் அறிவிப்பு மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications