தலைசுற்ற வைத்த தக்காளி விலை! காலையில் இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியுஸ்! இனிமே விலை குறையுமாம்!
சென்னை: அண்டை மாநிலங்களில் மழை குறைந்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ தக்காளி 60 ரூபாக்கு விற்பனையான நிலையில், தற்போது கிலோ 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் வெளி மாநிலங்களிலும், உள்ளூர்களிலும் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. வரத்து குறைந்து வந்ததால், தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ 60 ரூபாய் வரை விற்கப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட்
சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வந்தாலும், தாக்காளி உள்ளிட்ட பெருமளவு காய்கறிகள், ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு, நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் வருகின்றன. நாள்தோறும் 80 வாகனங்களில் தக்காளி கொண்டு வரப்படுகிறது. கனமழை எதிரொலியால் காய்கறி வரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

கிடுகிடுவென உயர்ந்த விலை
தொடர் மழையால் வழக்கமாக கொண்டு வரப்படும் தக்காளி வரத்து குறைந்ததால், கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. சுமார் 90 வாகனங்களில் வரவேண்டிய தாக்காளி வரத்து, மழை காரணமாக 40 முதல் 45 வாகனங்களில் மட்டுமே வந்தடைந்தது. இதனால் கடந்த காலங்களில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து, கிலோ 60 ரூபாய்க்கு விற்பானையானது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஒரு கிலோ தக்காளி 20 முதல் 30 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், திடீரென 60 ரூபாய்க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். தக்காளி விலை உயர்வால் தவித்து வந்த மக்களுக்கு ஆறுதலாக, விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.

கணிசமாக குறைந்துள்ளது
இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூர்களில் சற்று மழை குறைந்ததால், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த நாட்களில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை, 20 ரூபாய் குறைந்து, 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெங்காயம், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மழை குறைந்தால் விலை குறையும்
தற்போது அண்டை மாநிலங்களில் மழை குறைந்துள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்து கோயம்பேடு சந்தையில் விலை குறைந்துள்ளது. மழை தொடர்ந்து நீடிக்குமானால் வரத்து குறைந்து விடும். இதனால் தக்காளி விலை மட்டுமின்றி பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications