இனி ரேஷன் கடைகளிலும் தக்காளி, காய்கறிகள் விற்பனை.. அமைச்சர் தகவல்!
சென்னை: ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகள் விற்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ 85- முதல் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழைக்காலம் என்பதால் வரத்து இல்லாத நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு சில்லறை விலையில் ரூ 130 முதல் 150 வரையும் மொத்த விலையில் ரூ 100 முதல் ரூ 130 வரையும் விற்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி
இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி, தக்காள் இல்லாமல் ரசம் வைப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதிக விலைக்கு விற்க
இதனிடையே தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடை
அதன் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- முதல் ரூ.100/- வரை குறைவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
8 மெட்ரிக் டன் தக்காளி
இன்று மதியம் வரை தோராயமாக 8 மெட்ரிக் டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெளிச்சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலைப்பட்டியல்:
தக்காளி ரூ.79
உருளைக்கிழங்கு ரூ.38
வெண்டைக்காய் ரூ.70
சுரக்காய் ரூ.43
பீட்ரூட் ரூ.40
பீன்ஸ் ரூ.70
கோஸ் ரூ.28
கொத்தமல்லி ரூ.15
புதினா ரூ.04
பச்சை மிளகாய் ரூ.32
கத்தரிக்காய் ரூ.65
கத்தரிக்காய் ரூ.68
சௌ சௌ ரூ.20
நூக்கல் ரூ.42
வெள்ளரிக்காய் ரூ.15
முருங்கை காய் ரூ.110
என்ற விலையில் கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறம்
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறிகள்
அரசின் இந்நடவடிக்கையால் நேற்று வரை வெளிச்சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.150/- என்று விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.90-100 வரை எனவும் மேலும் இதர காய்கறிகள் விலையும் வெளிச்சந்தையில் கணிசமாக குறைந்துள்ளதாக அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.