அடுத்த அதிரடி.. ஆளுநர் ஆர்என் ரவியை திடீரென்று சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. பின்னணி என்ன?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை நாளை எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் சந்தித்து பேச உள்ளார். இது திமுகவுக்கு எதிரான வியூகமாக பார்க்கப்படும் நிலையில் பின்னணியில் பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ளன.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

அதிமுக உள்கட்சி பூசல்
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு உள்பட பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஓ பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். உள்கட்சி பூசல்களுக்கு மத்தியில் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கின.

ஆக்சனில் இறங்கிய எடப்பாடி
அதேவேளையில் திமுக அரசை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும், அதிமுகவின் செயல்பாடுகள் உள்கட்சி பூசல்களால் முடங்கியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆக் ஷனில் இறங்கி உள்ளார். சென்னை, கடலூர், மயிலாடுத்துறை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

2024 தேர்தல் கூட்டணி
மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூறிய சில விஷயங்கள் அரசியலில் புயலை கிளப்பின. 2024 அதிமுக தலைமையில் மிகப்பெரும் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார். அதோடு பிரதமர் மோடி, அமித்ஷா பற்றிய கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாகவும், பிற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க அவர் முயற்சிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த அதிரடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை நாளை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச உள்ளார். இதற்காக ஆளுநர் மாளிகை தரப்பில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி நாளை மதியம் 12.30 மணிக்கு நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேச உள்ளார்.

திமுக மீது புகார் அளிப்பு?
சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடந்த பலாத்காரம், கொலை சம்பவங்களை குறிப்பிட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் தான் நாளை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டம்-ஒழுங்கு பற்றியும், திமுக அரசு மீதும் புகார் மனுவை ஆளுநர் ஆர்என் ரவியிடம் வழங்கலாம் என கூறப்படுகிறது.

ஏன் முக்கியம்?
முன்னதாக ஆளுநர் ஆர்என் ரவி பல்வேறு மேடைகளில் புதிய கல்வி கொள்கை, சனாதன தர்மம் பற்றி பாசிட்வாக பேசினார். அதேவேளையில் திராவிடத்துக்கு எதிராகவும் கருத்துகள் தெரிவித்தார். இதனால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பபெற வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினர். இதனால் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி நேற்று முன்தினம் திடீரென்று டெல்லிக்கு 2 நாள் பயணமாக சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் தான் உடனடியாக நாளை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க உள்ளார். இதனால் இந்த சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications