செஸ் ஒலிம்பியாட் தொடர்... முதல்முறையாக ஒலிம்பிக் போல தீ சுடர்! களைகட்டும் மாமல்லபுரம்!
சென்னை: ஒலிம்பிக்கை போல் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கும் தீச்சுடர் அறிமுகம் செய்யப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்தப் போட்டியை நடத்த ரூ.92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொடரை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்த சிறப்பு அதிகாரி தலைமையில் குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

விமான நிலையத்தில் சிறப்பு கவுன்ட்டர்
வரும் ஜூலை மாதம் முதலே வெளிநாட்டு வீரர், வீராங்கனை, பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னை விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக சிறப்பு கவுன்ட்டர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுன்ட்டர்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்திய அணி அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா தரப்பில் 4 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரு ஆடவர் அணிகள், இரு மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு ஜாம்பவான் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் சுடர்
இந்தநிலையில் ஒலிம்பிக்கை போலவே செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு தீச்சுடர் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீச்சுடர் இந்தியாவில் தொடங்கி, உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு தொடரில் போதிய நேரமின்மை காரணமாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மட்டும் தீச்சுடர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் செஸ் விளையாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவு நிறைவேறியுள்ளது
இதுகுறித்து பேசிய செஸ் ஒலிம்பியாட் இயக்குநர் பரத் சிங் சவுஹான், ஒலிம்பிக் தொடருக்கு ஏதென்ஸ் எப்படியோ, அப்படியே செஸ் விளையாட்டுக்கு இந்தியா. செஸ் ஒலிம்பியாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது. இன்னும் சில நாட்களில் தீச்சுடர் பயணிக்கும் வழியும், நேரமும் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications