திருச்சி சூர்யாவின் ஓயாத அதிரடி- பாஜகவில் இருந்து வெளியேற காரணமே 'நீங்க'தான் பிரதர்...பொளேர் போடு!
சென்னை: பாஜகவில் இருந்து தாம் வெளியேற காரணமே அக்கட்சியின் இளைஞர் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டிதான் என்று திருச்சி சூர்யா தமது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜகவின் சமீபத்திய சர்ச்சை முகங்களில் ஒருவராக இருந்தவர் திருச்சி சூர்யா. திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா எம்.பி.யின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக பாஜக, சூர்யாவை அரவணைத்துக் கொண்டது.
பாஜகவுக்குள் நுழைந்த திருச்சி சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலை கோஷ்டியில் முக்கியமான நபராக இடம்பிடித்தார். இதனால் அவருக்கு மாநில ஓபிசி பிரிவு தலைவர் பதவி கிடைத்தது.
வருங்கால பாரத பிரதமர் வேட்பாளர் தலைவா நீங்க- அண்ணாமலைக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் திருச்சி சூர்யா
திமுக மீது விமர்சனம்
பாஜகவில் இருந்தவரை இடைவிடாமல் திமுகவினரை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். எந்த எல்லைக்கும் சென்று திமுகவினரை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இன்னொரு பக்கம், பாஜகவில் தலைவிரித்தாடிய உட்கட்சி பூசலுக்கும் தமக்கே உரிய அதிரடி பாணியில் பதிலடிகளையும் கொடுத்து வந்தார் திருச்சி சூர்யா.
டெய்சிக்கு ஆபாச, கொலை மிரட்டல்
இத்தகைய அதிரடிகளின் அதி உச்சமாகத்தான் பாஜகவின் மாநில நிர்வாகி டெய்சி சரணுக்கு கிடைத்த அர்ச்சனை. செல்போனில் டெய்சி சரணை அழைத்து ஆபாசமாக, கேவலமாக விமர்சித்தார் சூர்யா. டெய்சிக்கு கொலை மிரட்டலும் விடுத்தார் திருச்சி சூர்யா. இந்த செல்போன் பேச்சு ஆடியோ பாஜக தலைவர்களிடத்தில் ஏற்கனவே வலம் வந்த நிலையில் ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது.
சூர்யா விவகாரத்தில் காயத்ரி
டெய்சியை ஆபாசமாக விமர்சித்த திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என கலகக் குரல் எழுப்பினார் பாஜக நடிகை காயத்ரி. அதனால் கோபமடைந்த அண்ணாமலை, காயத்ரி ரகுராமை 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கினார். இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வைப்பதற்காக காயத்ரி போராடிப் பார்த்து ஓய்ந்துவிட்டார். இப்போது வேறு கட்சிக்கு தாவ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் காயத்ரி.
சூர்யா பதவி பறிப்பு
இன்னொரு பக்கம், டெய்சி- திருச்சி சூர்யா இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியது பாஜக. இதில் சூர்யா மன்னிப்பு கேட்டதாக அறிவிக்கப்பட்டது. டெய்சியும் கூட நானும் சூர்யாவும் அக்கா தம்பியாக இருப்போம் என்றார். ஆனாலும் திருச்சி சூர்யாவின் கட்சி பதவி 6 மாத காலத்துக்கு பறிக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார். அதேநேரத்தில் தனது கோஷ்டியை சேர்ந்தவர் திருச்சி சூர்யா என்பதால் கட்சிப் பணியை தொடர்ந்து செய்யவும் அண்ணாமலையால் அனுமதிக்கப்பட்டார்.
பாஜகவில் இருந்து திடீரென விலகல்
திருச்சி சூர்யா- டெய்சி விவகாரத்தில் பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பெயரும் அடிபட்டது. அவர் மீது ஏராளமான புகார்கள் வரிசை கட்டி நின்றன. இந்த நிலையில் பாஜகவில் இருந்து திடீரென விலகுவதாக நேற்று ட்விட்டரில் அறிவித்தார் திருச்சி சூர்யா. பின்னர் அண்ணாமலைக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் திருச்சி சூர்யா வெளியிட்டார். அதில், நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக தகுதி படைத்தவர் அண்ணாமலை என புகழ்ந்திருந்தார். அதேநேரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகியோர்தான் அத்தனை பிரச்சனைக்கும் மூல காரணம்; இருவரும் அண்ணாமலையின் நடவடிக்கைகளில் தலையிட கூடாது எனவும் கூறியிருந்தார்.
அமர்பிரசாத் ரெட்டிதான் காரணமாம்
இதன்பின்னரும் திருச்சி சூர்யா ஓயவில்லை. பாஜகவின் இளைஞர் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டர் ஐடியை டேக் செய்து, நான் கட்சியை விட்டு வெளியேற காரணமே நீங்கதான் பிரதர்.. உங்களை டேக் செய்ய மறந்துவிட்டேன்..நன்றி என இழுத்துவிட்டிருக்கிறார் திருச்சி சூர்யா. இன்னும் எத்தனை எத்தனை அதிரடிகளை கொட்டப் போகிறாரோ திருச்சி சூர்யா? என பதற்றத்தில் இருக்கின்றனராம் பாஜக 'தலை'கள்.