கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7500 பேரை தேடி கண்டுபிடிக்க தீவிர முயற்சி
சென்னை: கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7500 பேரை தேடி கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது. 7500 தொழிலாளர்களையும் கண்டுபிடித்து பரிசோதிக்க மாவட்ட வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவன் மிகப்பெரிய வணிக வளாகமான கோயம்பேடு மார்க்கட்டில் காய்கறி, பழங்கள், பூ விற்கும் கடைகள் 3200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இந்த கோயம்பேடு மார்க்கெட்டில் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து காய்கறி வாங்கி செல்லும் இடமாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்காத காரணத்தாலும் பல்லாயிரம் மக்கள் வந்து சென்றதாலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் மையமாக உருவெடுத்துள்ளது. இதனால் சில்லறை விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சலூன் காரருக்கு கொரோனா
தற்போதைய நிலையில் சுமார் 200 வாகனங்களுக்கு மட்டுமே தினமும் காய்கறிகள் இறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சில்லறை கடைகள் வைத்துள்ளவர்கள் வாகனத்தில் வர அனுமதிக்கப்படுகிறது இந்நிலையில் அண்மையில் கோயம்பேடு மார்க்கெட்டி அருகே சலூன் கடை நடத்தி வந்தவருக்கு கொரோனா பரவிய நிலையில் அவருடைய குடும்பத்தினர் உள்பட 10 பேருக்கு பரவியது.
அரியலூரில் பாதிப்பு
இதையடுத்து கோயம்பேடு பழ வியாபாரி, அவருடைய மகன் சுமை தூக்கும் தொழிலாளி, என 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் போலீஸ்காரர் உள்பட பலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கோயம்பேட்டில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள், கூலி தொழிலாளிகள் என பலரும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்றுவிட்டனர். இப்படி கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் சென்ற கூலி தொழிலாளர்கள் மூலம் பெரம்பலூரில் ஒன்று அரியலூரில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அரியலூரிலும் கொரோனா
இந்நிலையில் கோயம்பேட்டில் இருநது கொரோனா பாதித்தவர்கள் மூலம் விழுப்புரத்தில் இன்று காலை 39 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் தற்போது 60 க்கும் ற்பட்டோருக்கு கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 107 பேருக்கு கடலூரில் இன்று கொரோனா அதிகரித்துள்ளது. இதேபோல் அரியலூரிலும் சுமார் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூலி தொழிலாளர்கள்
இதன் மூலம் சென்னை கோயம்பேடு மூலம் 200 பேருக்கு கொரோனா பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு தொழிலாளர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ள 7500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தேடி கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது. சுமார் 7500 பேரையும் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்ய அழைப்பு
கோயம்பேடு தொழிலாளர்கள் மற்றும் அண்மையில் கோயம்பேடு சென்று வந்தவர்கள் அனைவரும் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. சென்னை கோயம்பேடு சந்தை மூலம் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவி உள்ளதால் அச்சம் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு டிரைவர்கள், தொழிலாளர்கள் சென்றுள்ளதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் மாவட்ட நிர்வாகங்கள் அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன.