பாராலிம்பிக்கில் மகத்தான சாதனை! மூன்று தங்கம் அள்ளிய மதுரை மாணவி ஜெர்லின்! வாழ்த்திய டிடிவி தினகரன்
சென்னை : பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் குழுப் போட்டிகளிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டில் தற்போது காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயரட்சகன் என்பவரது மகள் ஜெர்லின் அனிகா கலந்து கொண்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான்
மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர், இறகுப்பந்து போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டி
இந்நிலையில் பிரேசிலில் நடைபெற்று வரும் 24வது செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவு போட்டியில் பங்கேற்றார் ஜெர்லின். அதில், ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே.நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் அபினவ் சர்மாவுடன் இணைந்து மலேசியாவின் பூன் - டியோ ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம், குழு இறகுப்பந்து போட்டியிலும் தங்கம் என மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
மதுரை மாணவி சாதனை
2019ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்லின் அனகா, இந்திய அளவில் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள ஜெர்லின், தற்போது 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளதால் முதல் இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம் வென்றுள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
டிடிவி தினகரன் பாராட்டு
இந்நிலைலையில் மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், "பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் குழுப் போட்டிகளிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன்.
ஜெர்லின் ஒரு முன் மாதிரி
நெஞ்சில் உறுதியும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான ஜெர்லின் ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார். எதிர்காலத்தில் இன்னும் பல பெருமைகளை தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசத்திற்கும் பெற்றுத்தர செல்வி.ஜெர்லின் அனிகா அவர்களை வாழ்த்துகிறேன். " என பதிவிட்டுள்ளார்.