ஆஹா.. ஜஸ்ட் மிஸ்தான்.. அதிமுக எப்படி தோற்றிருக்கு பாருங்க.. எல்லாம் டிடிவி தினகரன் கட்சி செய்த வேலை
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், முக்கியமான சில தொகுதிகளில், அதிமுக தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது.
குறிப்பாக, டிடிவி தினகரன் கட்சியால்தான் 30 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை இழந்துள்ளது அதிமுக.
அதிமுகவுக்கு நீண்டகாலமாக பக்கபலமாக இருந்தது முக்குலத்தோர் வாக்குகள். இதை குறிவைத்துதான் டிடிவி தினகரன் கட்சி, தென்மாவட்டங்களில் அதிகம் போட்டியிட்டது. வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை தேமுதிகவிற்கு பகிர்ந்து அளித்தது.
திடீர் "கட்டுப்பாடுகள்".. ஓகே சொன்ன ஸ்டாலின்.. என்ன காரணம்.. வெளியான பின்னணி..?
ஓட்டு பிரிந்தது
தினகரன் வியூகத்திற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது என்றுதான் தேர்தல் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. சில தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. அந்த இடங்களில் தினகரன் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகத்தான் ஓட்டு பிரிந்து திமுகவுக்கு சாதகமாகி உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
விருதாசலம்
விருத்தாசலம் தொகுதியை எடுத்துக்கொள்ளலாம். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று உள்ளார். அவர் பெற்ற ஓட்டு, 77 ஆயிரத்து 64. அதிமுக கூட்டணியில் அந்த தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கார்த்திகேயன் போட்டியிட்டார். அவர் பெற்ற ஓட்டு 76 ஆயிரத்து 202. வாக்கு வித்தியாசம் 862. இங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார். அவர் பெற்ற ஓட்டு 25 ஆயிரத்து 908. மூன்றாவது ஒரு சக்தி இத்தனை ஓட்டுகளை பிடித்ததால்தான் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தோல்வியைத் தழுவியுள்ளார். அதுவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுந்தர் 23 ஆயிரத்து 427 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் 91,805 ஓட்டுகள் வாங்கி உள்ளார். 1622 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவியுள்ளார். இந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ரஞ்சித்குமார் பெற்ற ஓட்டு 7211. இது அதிமுகவுக்கு வந்து சேர வேண்டிய ஓட்டுக்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது கிடையாது.
வாசுதேவநல்லூர்
தென்மாவட்ட தொகுதியான, வாசுதேவநல்லூரில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 68 ஆயிரத்து 730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மனோகரன் 66 ஆயிரத்து 363 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் தங்கராஜ் 13 ஆயிரத்து 376 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 2367 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
நெய்வேலி
நெய்வேலி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜெகன் ஆகியோர் இடையிலான வாக்கு வித்தியாசம் 977 மட்டும்தான். இங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் பக்த ரட்சகன் 2230 வாக்குகள் பெற்றுள்ளார். பாமக தோல்விக்கு இது ஒரு காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
மன்னார்குடி கலகலக்க
மன்னார்குடி தொகுதியில் திமுகவின் டிஆர்பி ராஜா 87 ஆயிரத்து 172 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராஜமாணிக்கம் 49 ஆயிரத்து 779 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் காமராஜ் அமோக வாக்குகள் பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டு 40 ஆயிரத்து 481. இப்போது புரிந்திருக்குமே.
தி நகர்
சென்னை தி நகர் இந்த விஷயத்தில் ஒரு அருமையான உதாரணம். இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட கருணாநிதி 56 ஆயிரத்து 35 ஓட்டுகள் பெற்றார். அதிமுகவின் சத்தியநாராயணன் 55 ஆயிரத்து 898 ஓட்டுகள் பெற்றார். திமுக வேட்பாளர் வெறும் 137 ஓட்டுகளில் வெற்றி பெற்றார். இங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 782 ஓட்டுகள் வாங்கியது. இந்த ஓட்டுகள் அதிமுகவிற்கு வரவேண்டியது. அப்படி வந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும்.
சாத்தூர் ராஜவர்மன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி நிலவரத்தை பாருங்கள். அங்கு அதிமுகவிலிருந்து கடைசிநேரத்தில் வெளியேற்றப்பட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் சேர்ந்த ராஜவர்மன் 32916 வாக்குகள் பெற்றுள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ரகுராமன் 74 ஆயிரத்து 174 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் ரவிச்சந்திரனை விட இவர் 11179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசியில் 370 ஓட்டுதான்
தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வம் மோகன்தாஸ் பாண்டியனை விட காங்கிரஸ் வேட்பாளர் பழனி 370 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் முகமது பெற்ற ஓட்டு 9944.
சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் தொகுதி எப்போதுமே அதிமுகவை கைவிட்டது கிடையாது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அலை வீசிய போது பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோற்றுப்போனார். அப்போது 4 தொகுதியில் மட்டும் தான் அதிமுக வென்றது. அதில் ஒன்று சங்கரன்கோவில். ஆனால் 30 வருடங்கள் கழித்து முதல் முறையாக அதிமுக அந்த தொகுதியில் தோற்றுள்ளது. அமைச்சராக இருந்த ராஜலட்சுமி 5297 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜாவிடம் தோற்றுள்ளார். இங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அண்ணாதுரை 22652 வாக்குகள் பெற்றுள்ளார். இப்படித்தான் வரலாற்று தோல்வி அதிமுகவுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.