ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி.. சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க தினகரன் வலியுறுத்தல்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை உயர்நீதிமன்றமும் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர்நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில், தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல் இங்குள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதிமுக-திமுக இரட்டை வேடம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய அரசும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் கடந்த காலங்களில் இரட்டைவேடம் போட்டதால், இப்போதும் அவர்களை நம்புவதற்கு தூத்துக்குடி மக்கள் தயாராக இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளை தந்திரமாக அதன் உரிமையாளர்கள் செய்துவிடுவார்களோ என்ற பயம் தூத்துக்குடி மக்களிடம் இருக்கிறது.

ஹைகோர்ட் கண்காணிக்க வேண்டும்
அவர்களின் இந்த உணர்வினைப் புரிந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றமும் கண்காணித்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வெளி மாநில அனுப்ப கூடாது
அதேநேரத்தில், தற்போதுள்ள சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை நிறுத்திடவேண்டும். தமிழகத்தின் தேவையே இன்னும் பூர்த்தியாகாத நிலையில், இங்கே உற்பத்தியாகும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கூடுதலாக உற்பத்தி தேவை
மேலும், வாய்ப்புள்ள மற்ற ஆலைகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி அரசு மேற்கொள்ளவேண்டும். இதுமட்டுமின்றி, தடுப்பூசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இலவசமாக தடுப்பூசிகளைப் போடுவது ஆகியவற்றையும் மத்திய, மாநில அரசுகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தினகரன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications