பொன்முடியின் “ஓசி” பஸ் பேச்சு.. மூத்த அமைச்சர் இப்படி பேசலாமா? முதலமைச்சர் எச்சரித்தாரே - டிடிவி
சென்னை: பெண்களை ஓசி பேருந்தில் பயணம் செய்பவர்கள் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசி இருப்பது அதிர்ச்சியளிப்பதாக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்." என்றார்.

கடும் கண்டனம்
அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இதுகுறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

டிடிவி தினகரன் கண்டனம்
அவர் தனது பதிவில், "அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து 'ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் உத்தரவு
பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?

திராவிட மாடல்
மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications