எதுக்கு வம்பு..வீண்பழி தான் மிச்சம்! விஐபிகளுக்கு சிகிச்சை தர டாக்டர்கள் இனி பயப்படுவார்கள் -டிடிவி
சிவகங்கை: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையால் எதிர்காலத்தில் விஐபிகளுக்கு சிகிச்சை அளிக்கவே மருத்துவர்கள் பயப்படுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் இதனைப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு போக முடியாது எனவும் அனல் கக்கினார் தினகரன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.

டிடிவி தினகரன்
மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவர்களையும், அரசு அதிகாரிகளையும், அவமரியாதை செய்யும் வகையிலும் அவர்களின் மதிப்பு மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை உள்ளதாக கூறினார். மர்மமான முறையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
சசிகலாவும், சி.விஜயபாஸ்கரும் பொதுவாழ்வில் இருப்பதால் அவர்கள் மீது இப்படி குற்றஞ்சாட்டுவது இயல்பானது என்றும் ஆனால் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெயரெடுத்த ஜெ.ராதாகிருஷ்ணன் மீதும் ஆறுமுகசாமி குற்றஞ்சாட்டியிருப்பது மர்மமாக உள்ளது எனக் கூறியிருக்கிறார். இதேபோல் அப்போலோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டி மருத்துவத்துறைக்கு கிடைத்த மிகப்பெரும் நிபுணர் என்றும் அவர் மீதும் ஆறுமுகசாமி ஆணையம் புகார் தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது எனக் கூறினார்.

சிபிஐ விசாரணை
தன்னை பொறுத்தவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதிய கோரிக்கையை முன் வைத்த அவர், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவே கூறியும் அதனை ஆறுமுகசாமி ஆணையம் கவனித்தில் கொள்ளவில்லை என வேதனைத் தெரிவித்தார். அபாண்டமான குற்றச்சாட்டுகளை எந்த வித முகாந்திரமும் இல்லாமல் ஆறுமுகசாமி முன் வைத்திருப்பதாக அனல் கக்கினார்.

டாக்டர்கள் பயப்படுவார்கள்
முன்னள் நீதிபதி என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கக் கூடாது என்றும் இவரது அறிக்கையால் எதிர்காலத்தில் விஐபிகளுக்கு சிகிச்சை அளிக்கவே மருத்துவர்கள் பயப்படுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார். மருத்துவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உள்நோக்கம் கற்பித்துள்ளதாக கூறிய டிடிடி தினகரன், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையால் தமிழக விஐபிக்கள் வரும் காலத்தில் அருகாமை மாநிலங்களில் தான் சிகிச்சைக்கு ஓட வேண்டும் போல் என கிண்டல் அடித்தார்.












Click it and Unblock the Notifications