''அருண்ஜெட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் மோடி சித்ரவதையால் இறந்தனர்''.. வம்பை விலைக்கு வாங்கிய உதயநிதி!
சென்னை: ''முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடியின் சித்திரவதை காரணமாக இறந்தனர் ''என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி பக்ஷி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.
தலைவர்களின் சர்ச்சை பேச்சு
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு சில அரசியல் தலைவர்கள் கூறும் கருத்துகள் சர்ச்சையாகி விடுகின்றன. பெண்கள் குறித்து தி.மு.க.வின் திண்டுக்கல் லியோனி அருவருப்பாக பேசியது அனைவரையும் முகம் சுளிக்க செய்தது.
சர்ச்சையில் சிக்கிய உதயநிதி
லியோனின் கருத்துக்கு தி.மு.க வேட்பாளரே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதேபோல் தி.மு.க எம்.பி.யும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா முதல்வர் குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக ஆ.ராசாவுக்கு 2 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். இவ்வாறு தி.மு.க தலைவர்கள் வரிசையாக சர்ச்சையில் சிக்கி வர, தற்போது ஒரு கருத்தை கூறப்போய் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மோடி மீது தாக்கு
சில நாட்களுக்கு முன்பு தாராபுரத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''தி.மு.க.வின் இளவரசர், கட்சியில் மூத்தவர்களை ஓரம் கட்டி விட்டு பதவி வாங்கி விட்டார்'' என்று உதயநிதியை கடுமையாக தாக்கினார். பிரதமர் மோடிக்கு தனது பிரசாரத்தில் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், ''மோடி எத்தனை மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார் தெரியுமா? வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்களை மோடி மதிக்கவில்லை'' என்று கூறினார்.
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் குறித்து பேச்சு
உதயநிதி அடுத்து பேசிய பேச்சுதான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது '' முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் 'சித்திரவதை' 'அழுத்தம்' காரணமாக இறந்தனர்'' என்று உதயநிதி பேசியதுதான் சர்ச்சைக்கு விதை போட்டுள்ளது. இறந்து போன தலைவர்கள் குறித்து தேவையில்லாமல் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
|
சுஷ்மா ஸ்வராஜ் மகள் பதிலடி
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பன்சூரி ஸ்வராஜ், ' உதயநிதி ஜி. தயவுசெய்து உங்கள் பிரசாரத்தின்போது எனது தாய் குறித்து எதுவும் பேச வேண்டாம். நீங்கள் பேசியது அனைத்தும் பொய்யானவை. பிரதமர் நரேந்திர மோடி ஜி எனது அம்மாவுக்கு மிகுந்த மரியாதையை வழங்கினார். இருண்ட நேரத்தில் பிரதமர் மோடியும், பா.ஜ.கவும் எங்களுடன் துணை நின்றன. உங்களின் பேச்சு எங்களுக்கு வேதனை அளித்தது' என்று பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்தார்.
|
அருண் ஜெட்லி மகள் கண்டனம்
இதேபோல் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி பக்ஷியும் உதயநிதி ஸ்டாலினுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார். சோனாலி ஜெட்லி பக்ஷி டுவிட்டரில் கூறுகையில், ' உதயநிதி ஸ்டாலின் ஜி. உங்களுக்கு தேர்தல் அழுத்தம் இருப்பதாக எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் பொய் சொல்லி என் தந்தையின் நினைவை அவமதிக்கும்போது நான் அமைதியாக இருக்க மாட்டேன். அப்பா அருண் ஜெட்லியும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறப்பு பிணைப்பை(நட்பை) பகிர்ந்து கொண்டனர்.இத்தகைய நட்பை அறிய நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று நான் பிராத்தனை செய்கிறேன்' என்று சோனாலி ஜெட்லி பக்ஷி கூறினார்.