திமுகவில் இளைஞரணி, மாணவரணி இருப்பதை போல் பாஜகவில் வருமான வரித்துறை அணி இருக்கு -உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுகவில் இளைஞரணி, மாணவரணி இருப்பதை போல் பாஜகவில் வருமான வரித்துறை அணி, அமலாக்கத்துறை அணி என சார்பு அணிகள் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரி சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என கேசுவலாக பதிலளித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே பாஜகவின் சார்பு அணிகளாக செயல்படும் வருமான வரித்துறை அணியும், அமலாக்கத்துறை அணியும் தீவிரமாக செயல்படுகிறது என தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் இல்லங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் எவ வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதனால் தான் இந்த இரண்டு அமைப்புகளையும் பாஜகவின் சார்பு அணி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதனிடையே அமைச்சர் எ.வ.வேலு வீட்டிற்கு திமுக தலைமைக்கழகம் சார்பில் சென்ற ஆர்.எஸ்.பாரதி, இன்று மாலை ஐடி ரெய்டு பற்றி பிரஸ்மீட் கொடுப்பார் எனத் தெரிகிறது.
நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் முயற்சியில் இறங்கியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு சென்று கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்களிடம் கையெழுத்து பெற்றார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் தாம் நேரில் சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார். நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 22 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் திமுக அரசு முன்னெடுத்து வருவதாக கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சொன்னதை போல் திமுகவின் பிரச்சாரத்துக்கும், அடையவிருக்கும் வெற்றிக்கும் ஆளுநர் ரவி தான் சவுகரியமானவர் என்றும் இதனால் ஆளுநரை மாற்ற வேண்டாம் எனவும் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications