பெரம்பூரில் இறங்கிய உதயநிதியின் போர்படை தளபதி.. விஜய்க்கு எதிராக திமுக மாஸ்டர் ஸ்ட்ரோக்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். பெரம்பூரில் விஜய்யை தோற்கடிப்பதற்காக உதயநிதி தன்னுடைய போர்படை தளபதியை களமிறக்கியுள்ளார். அவர் இளைஞரணியை களத்தில் இறக்கி விஜய்க்கு எதிராக பலத்த வியூகங்களை வகுத்து வருகிறார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் களமிறங்கியுள்ளார். திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா, நாம் தமிழர் சார்பில் வெற்றி தமிழன் போட்டியிடுகிறார்கள். வடசென்னையை குறிவைத்து தவெக களமிறங்கியிருப்பது திமுக மற்றும் அதிமுக இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு எதிராக வியூகம்
விஜய் திமுக எதிர்ப்பு அரசியலை மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறார். இதனால் விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. முதல் தேர்தலிலேயே விஜய்க்கு தோல்வியை பரிசாக கொடுத்தனுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.
அதனால் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் திமுக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பெரம்பூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக கிரிராஜன் எம்பி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் செயல்பாட்டில் திமுக தலைமை திருப்தியடையவில்லை. விஜய்க்கு எதிரான வியூகங்களை அவர் சரியாக வகுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
களத்தில் உதயநிதியின் தளபதி
இதனால் திமுக தலைமை அவரை மாற்றிவிட்டது. அவருக்கு பதிலாக திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உதயநிதியே நேரடியாக தலையிட்டு இந்த பொறுப்பை ஜோயலிடம் வழங்கியுள்ளார். ஜேயால் இந்த தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்துள்ளார்.
அதை சரி செய்யும் விதமாக முக்கிய பொறுப்பை வழங்கி சமாதானப்படுத்தியுள்ளனர். உதயநிதியின் அஸைன்மென்ட் என்பதால் ஜோயல் களத்தில் வேகம் காட்டி வருகிறார். அவர் திமுக இளைஞரணியில் மாவட்ட வாரியாக சிறப்பாக பணியாற்றுவோர் பட்டியலை எடுத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 10 பேர் வீதம் 1,000 நிர்வாகிகளை பெரம்பூர் வரவழைத்துள்ளார்.
தீயாய் வேலை பார்க்கும் இளைஞரணி
உள்ளூர் நிர்வாகிகளுடன் அவரை இணைத்து வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் முக்கிய பணியே 18-35 வயதிற்குட்பட்டோரின் வாக்குகளை திமுகவுக்கு கொண்டு வருவதுதான். விஜய்க்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்து திமுக வெற்றிக்காக களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்கள். காலை முதல் இரவு வரை இடைவிடாமல் பணியாற்றி வருவதால் களத்தில் திமுக கடுமையான போட்டி கொடுக்கிறது.














Click it and Unblock the Notifications