குடிநீரை காசு கொடுத்து வாங்குவதே கொடுமை.. அதிலும் இப்படியா .! வேதனையில் சென்னை மக்கள்
சென்னை: குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தமிழக தலைநகரான சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி சிலர் சுகாதாரமற்ற தண்ணீர் கேன்களை விற்பனை செய்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்கின்ற நீரை காத்திருந்து காசு கொடுத்து வாங்கும் அவல சூழலில், மக்களின் வேதனையை மேலும் காசாக்க நினைக்கும் சில வணிகர்களை நினைக்கும் போது, ஏழைகளை சுரண்டும் பெருமுதலாளிகளை விட கொடுமையானவர்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.
சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, பொது மக்கள் குடிநீர் கேன்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேன்கள் மூலம் அடைக்கப்பட்ட குடிநீர் சென்னையில் விற்க எடுத்து வரப்படுகிறது.
சென்னையில் நிலவும் தண்ணீர் தேவையை பயன்படுத்தி, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு காலாவதியான குடிநீர் கேன்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில்அதிகாரிகள் ஈடுபட்டனர் அப்போது ஐஎஸ்ஐ மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் தரச் சான்றிதழின்றி தயாரிப்பு தேதியும் இன்றி பல வாகனங்களில் எடுத்து வரப்பட்ட, 500-க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் அதிகாரிகள்.
காங்கிரஸுக்கு ஓட்டு போட்டதற்காக சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு... பாஜக ஆதரவாளரின் வெறிச்செயல்!
இதனையடுத்து விற்பனைக்கு செல்லவிருந்த சுகாதாரமற்ற தண்ணீர் கேன்களை பறிமுதல் செய்தனர். சென்னையில் கோயம்பேடு, கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கேன் குடிநீர் நிறுவனங்கள் சிலவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதில் சில நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை உற்பத்தி செய்து விநியோகித்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இத்தகைய சில நிறுவனங்களுக்கு சீல் வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.