பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு என பேச்சு! மன்னிப்பு கேட்டார் கர்நாடக அமைச்சர் ஷோபா
சென்னை: பெங்களூர் குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். முதலமைச்சரின் கருத்தை பெற்றே, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்புக் கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்ததாக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறினார்.
வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மத்திய இணை அமைச்சர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி நாளை மறுதினத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications