கொரோனா பெருந்தொற்று.. இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்.. தமிழில் ட்வீட் போட்ட அமெரிக்கா!
சென்னை: கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்திய மக்களுக்கும் இந்திய முன்கள வீரர்களுக்கும் கூடுதலாக உதவிகள் கிடைக்க விரைந்து செயல்படுவோம் என சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழில் ட்வீட் போட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால் அங்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாமல் பல நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என சீரம் நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு ட்வீட் மூலம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய தலைவர்களும் இந்தியாவுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில் கோவிட் 19 பெருந்தொற்று இந்திய மக்களை கடுமையாக பாதித்திருப்பது எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திய மக்களுக்கும் இந்திய முன்கள வீரர்களுக்கும் கூடுதலான உதவிகள் கிடைக்க விரைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிச்சாலும் எவ்ளோ நல்ல விஷயம் நடந்திருக்கு பாருங்க!
அது போல் இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில் இந்தியாவில் பெருகி வரும் கோவிட் பெருந்தொற்று அமெரிக்காவை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. பெருமுயற்சியுடன் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் எமது இந்திய நண்பர்களுக்கும் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றுவோர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் பொருட்களையும் வழங்குவதற்கு இரவுப் பகலாக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
— US Consulate Chennai (@USAndChennai) April 25, 2021
இந்த இருவரின் கருத்துகளையும் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.