அரசியல் களத்தில் மூழ்கிய வடிவேலு.. ஏமாந்து 10 வருஷம் ஆச்சு.. ஆனா எதுவும் மாறல
சென்னை: அரசியல் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் மாற்றும் என்பதற்கு வடிவேலு ஒரு உதாரணம் எனலாம். சரியாக 10 வருடங்களுக்கு முன்பு, இதே போன்று பரபரப்பான சூழலில் நடந்த சட்டமன்ற தேர்தல் தான் வடிவேலுவின் வாழ்ககையையே புரட்டிப் போட்டுவிட்டது.
கவுண்டமணிக்கு பிறகு அசைக்க முடியாத காமெடி மன்னனாக வலம் வந்தவர் வைகைப் புயல் வடிவேலு. தமிழகத்தில் பல இல்லங்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக கொடிக் கட்டிப் பறந்தார்.
ஒவ்வொரு படங்களிலும் ஹூரோவுக்கு இணையாக, ஏன்.. அதற்கு மேலேயே இவரது ரோலுக்கு வெயிட் கொடுக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அந்த ஹீரோவை பார்க்க வரும் கூட்டத்தை விட, வடிவேலுவை பார்க்க வரும் கூட்டம் தான் அதிகம்.
இருக்கா? இல்லையா?.. வருமா வராதா?.. தமிழகத்தை விஞ்சும் புதுச்சேரி அரசியல் ஷோ
ஹிட்லரே சிரித்தாராம்
ஹிட்லரை விமர்சித்து சார்லி சாப்ளின் எடுத்த படத்தைப் பார்த்து ஹிட்லர் விழுந்து விழுந்து சிரித்தாராம். அது போன்று, இவர் யாரையாவது விமர்சித்து காமெடி செய்தால் கூட, சம்பந்தப்பட்ட நபர்கள் அதை ரசிப்பார்கள் தவிர, அவர் மீது கோபப்படமாட்டார்கள். அந்த அளவுக்கு வீரியம் நிறைந்த ஒரு காமெடியன், மக்கள் கலைஞன், மனதின் பாரங்களை அகற்றும் மருந்தாக இருந்தவர் வடிவேலு.
விஜயகாந்துடன் மோதல்
ஆனால், 2011 சட்டமன்ற தேர்தல் அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிட்டது. 'கேப்டன்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த் கட்சி தொடங்கிய நேரத்தில், அவருக்கும் - வடிவேலுக்கும், 'இடையில் இருந்து ஏற்றிவிட்ட சில நபர்களால்' பிரச்சனை ஏற்பட, வடிவேலுவின் வீடு தாக்கப்பட்டது. இதனால், இருவருக்குமான மோதல் உச்சமடைந்தது.
மக்கள் கூட்டம்
அப்போது சட்டமன்ற தேர்தல் வர, விஜயகாந்த் எதிர்ப்பு எனும் ஒற்றைப் புள்ளியில், திமுக தேர்தல் பிரச்சார பீரங்கியாக களமிறங்கினார் வடிவேலு. ஒவ்வொரு திமுக மேடைகளிலும் விஜயகாந்தை தனது நகைச்சுவை பாணியிலேயே கடுமையாக வடிவேலு விமர்சிக்க, அவரது பேச்சைக் கேட்கபதற்கு என்று கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்து, டிவியில் எப்படி வடிவேலுவின் சேட்டைகளை ரசித்து சிரித்தார்களோ, அதையே லைவாக பார்த்து ரசித்து கைத்தட்டினார்கள்.
லேட்டாக உணர்ந்த வடிவேலு
ஆனால், மக்களின் அந்த கைத்தட்டல்கள், சிரிப்பலைகள், திமுகவிற்கு வாக்குகளாக மாறவில்லை. திமுக படுதோல்வி அடைய, அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவரானார். மக்கள் அலை அலையாக வந்து கைத்தட்டி ரசித்தது தனது காமெடியைத் தான், அவர்கள் கடைசி வரை தனது பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது வடிவேலுவுக்கு ரொம்பவே லேட்டாக தான் புரிய வந்தது.
10 வருடங்களாக லாக் டவுன்
ஆட்சிகள் மாற, காட்சிகள் மாற, வடிவேலுவின் வாழ்க்கையும் மாறிப் போனது. உச்சத்தில் இருந்த ஒரு காமெடியனுக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. எனினும், இன்றும் செல்வமும், வளமும் பெற்று 'சோஷியல் மீடியா மீம்ஸ்' மன்னனாக வடிவேலு வலம் வருகிறார் என்றாலும், பட வாய்ப்புகள் மட்டும் இல்லை. இத்தனை வருடங்கள் கழித்து, சமீபத்தில் மனம் திறந்து பேசிய வடிவேலு, 'நான் பத்து 10 வருடங்களாகவே லாக்-டவுனில் தான் இருக்கேன்' என்று பேசியது அவரது ரசிகர்களை மட்டுமல்ல.. அனைவரையும் உலுக்கியது.
இதோ, 2021 தேர்தலும் வந்திவிட்டது. எது நின்றாலும், நிற்காவிட்டாலும் காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருப்பதை நிறுத்துவதில்லை. ஆம்! அரசியல் மேடையில் தனது வாழ்க்கையை வடிவேலு தொலைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டது.