ராஜ்யசபா தேர்தல்: வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவின் சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து தேர்வான 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைகிறது. இதையடுத்து 6 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஒரு ராஜ்யசபா எம்.பியை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேர்வை. தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக 3, அதிமுக 3 எம்.பிக்களை ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய முடியும்.
ராஜ்யசபா தேர்தலில் வைகோ
திமுகவின் 3 இடங்களில் ஒன்று மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ அந்த ஒரு இடத்துக்கான வேட்பாளர் என அக்கட்சியின் உயர்நிலைக் குழு அறிவித்திருக்கிறது. திமுக தொழிற்சங்கமான தொமுசவின் சண்முகம் மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் அக்கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வைகோ போட்டியிட தடை இல்லை
வைகோவை மதிமுக வேட்பாளராக அறிவித்த நிலையில் தேசதுரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1 மாத காலத்துக்கு வைகோவின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் வைகோ தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைகோ, சண்முகம் மற்றும் வில்சன் மூவரும் இன்று காலை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்று சட்டசபை செயலாளரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
அன்புமணி போட்டியிடுகிறார்
அதிமுகவைப் பொறுத்தவரையில் 3 இடங்களில் ஒன்றை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. பாமகவின் இளைஞரணி தலைவரான அன்புமணி, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. எஞ்சிய 2 வேட்பாளர்களை இறுதி செய்ய அதிமுகவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
அதிமுக வேட்பாளர்கள்
சிறுபான்மையினருக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்மகன் உசேனுக்கு ராஜ்யசபா சீட் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ராஜ்யசபா வேட்பாளர்களாக அதிமுக அறிவித்துள்ளது.