திருவள்ளுவர் சிலையை அவமதித்த பாவிகளுக்கு மன்னிப்பே இல்லை- வைகோ
சென்னை: செந்நாப் போதார்' திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பா.ஜ.க. டிவிட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை
சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கு, போக்குவரத்துக் காவல்துறை வழங்கும் ரசீதுகளில் இந்தி, ஆங்கில மொழி மட்டுமே இடம் பெற்று இருக்கிறது. "இந்தி மொழி இடம் பெற்ற அபராத ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வடிவமைத்து, அதனை தமிழகத்தில் பயன்படுத்திட உத்தரவிடப்பட்டிருக்கிறது. முற்றிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு அபராத ரசீதுகளைத் தயாரித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழக மக்கள் இச்செயலை மன்னிக்கவே மாட்டார்கள். பிரதமர் மோடி, அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றிக் கொண்டே இருக்கும்போது, இன்னொரு பக்கத்தில் தமிழ் மொழியை அழிக்கும் செயலில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு இருக்கிறது.
புதிய அரசு.. டெல்லியை நோக்கி நகர்ந்த 'மகாராஷ்டிரா புயல்'- அதி தீவிரமடையுமா? வலுவிழக்குமா?
முற்றுப்புள்ளி தேவை
கடந்த செப்டம்பர் 14 இல் இந்தி நாளில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இத்தகைய சூழலில், தமிழக அரசு இந்தியை நடைமுறைப்படுத்தத் தீவிரம் காட்டும் செயல் தமிழ் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். எனவே தமிழக அரசு இந்தித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திருக்குறள்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற மனிதத் தத்துவத்தை நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. நாடு, மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றக் கூடிய வாழ்வியல் நெறியை போதிப்பதால்தான் திருக்குறள் மனித சமூகத்தின் வழிகாட்டும் நூலாகத் திகழ்கின்றது.
பாரதியின் புகழாரம்
லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்குத்தான் இருக்கிறது. எனவேதான் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று மகாகவி பாரதி பொருத்தமாகப் பாடினார்.
கண்டனத்துக்குரியது
அத்தகைய திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்' திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசிய பா.ஜ.க. இது தொடர்பான படம் டிவிட்டரில் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும்.
பாஜக நிறுத்த வலியுறுத்தல்
திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்' அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பா.ஜ.க. நிறுத்த வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து பதிலடி கொடுப்பார்கள் என்று என்று தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார். மற்றொரு அறிக்கையில் வைகோ கூறியுள்ளதாவது:
உடல், உள்ளம் பதறுகிறது
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில், உலகப் பொதுமறை தந்தவரும், மனிதகுலத்துக்கே வழிகாட்டக் கூடிய ஒளிச் சுடரை வழங்கியவருமான திருவள்ளுவர் சிலை மீது சாணத்தைக் கொட்டி இருக்கின்றார்கள். இச்செய்தி கேட்ட நொடியில், இருதயத்தில் சூட்டுக்கோல் நுழைத்தது போன்று, உடலும் உள்ளமும் பதறுகின்றது.
பாவிகளுக்கு மன்னிப்பே இல்லை
நஞ்சினும் கொடிய செயலைச் செய்த பாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. தீச்செயலைச் செய்தவர்கள் மனித சமூகத்தில் நடமாடத் தகுதி அற்றவர்கள். திருக்குறள் காலத்தால் அழிக்க முடியாதது. மனிதகுலம் வாழும் வரை அறநூலாகவே வாழும். திருவள்ளுவரின் புகழ் இந்த மண்ணும் விண்ணும் இருக்கும்வரையில் நீடிக்கும்.
தலைகுனிவு செயல்
நெஞ்சம் கொதிக்கின்றது. முக்கடல் சங்கமத்தில் விண்முட்டும் திருவள்ளுவர் சிலை எழுப்பினார் கருணாநிதி. இது உலகின் பல நாடுகளில், பல மொழி பேசுவோர் திருவள்ளுவர் சிலை எழுப்பி தங்களை வாழ வழிகாட்டும் அறநெறி மாண்பாளராகப் போற்றுகின்றனர். இக்கொடியோர் செயலால் தமிழகம் வெட்கித் தலைகுனிகின்றது.
மன்னிக்க முடியாத மாபாதக செயல்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை என்றார் வள்ளுவர். தன்னை வெட்டிக் குழி பறிப்பவனையும் தாங்கி நிற்கின்றது நிலம் என்றார். அதுபோல இகழ்ச்சியையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். எனினும் மன்னிக்க முடியாத இம்மாபாதகச் செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும். இவ்வாறு வைகோ மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.