கையை பிடித்து அழுத வைகோ! அண்ணா "அழாதீங்க" சமாதானம் செய்த ஸ்டாலின்! நினைவுகூர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வைகோ குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது இருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் வைகோ. சுமார் 56 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் அவர் பயணித்து வருகிறார்.
நேற்றைய தினம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதில் சில நெகிழ்ச்சி சம்பவங்களும் அரங்கேறியது.

வைகோ
1964ஆம் ஆண்டில் அண்ணா முன்னிலையில் சென்னையில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ. அன்று முதல் தொடர்ச்சியாக திமுகவில் பல ஆண்டுகள் பயணித்து வந்தார். அண்ணா மறைந்த பின்பு, கருணாநிதி தலைமை பொறுப்பிற்கு வந்த பிறகும் வைகோ தொடர்ந்து திமுகவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராகவே இருந்தார்.

கருத்து வேறுபாடு
அந்த காலகட்டத்தில் வைகோவுக்கு இருந்த வரவேற்பும் ஆதரவும் மிக அதிகம். வைகோ பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும் அரங்கமே அதிரும். திமுக தலைமைக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த வைகோ 1978ஆம் ஆண்டு முதல்முறையாக ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் தொடர்ச்சியாக இரு முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், அதற்குள் 1993இல் அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கும் வைகோவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

புதிய கட்சி
திமுகவில் தன்னை புறக்கணிப்பதாகக் கூறி, கட்சியில் இருந்து வெளியேறிய வைகோ மதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது அவருடன் திமுக மாவட்டச் செயலாளர்களும் பலரும் அவருடன் அணிவகுத்தனர். இது அந்தச் சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரும் அவர் திமுக உடன் 2004 தேர்தல் உள்ளிட்ட சமயங்களில் கூட்டணி அமைத்துள்ளார்.

சர்ச்சை
இந்தச் சூழலில் தான் கடந்த 2016இல் கருணாநிதி குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திமுக தொண்டர்கள் இதனால் வைகோ மீது கடும் கோபத்தில் இருந்தனர். இதன் காரணமாகவே அப்போது கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நேரில் பார்க்க வைகோ சென்ற போது, அவரை திமுக தொண்டர்கள் அனுமதிக்கவில்லை.

ஆவணப்படம்
அதன் பின்னர் இரு தரப்பும் சமாதானம் ஆகியது தனிக்கதை! கருணாநிதி மறைந்த போது, அவரது உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் வைகோ. 2019 மக்களவை தேர்தல் முதலே திமுக உடன் தான் இணைந்து மதிமுக பயணித்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் வைகோவின் 56 ஆண்டுக் கால அரசியல் பயணம் குறித்த 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

கையெழுத்து
அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் வைகோ குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பொடாவில் கைதாகி வைகோ சிறையில் இருந்ததாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அப்போதும் குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார் என்றும் கருணாநிதி சொல்லியனுப்பினார் என்ற போது, படித்துப் பார்க்காமலேயே தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் வைகோ கையெழுத்திட்டதாகத் தெரிவித்தார்.

நெகிழ்ச்சி
மேலும், கருணாநிதி உடல் நலிவுற்று இருந்த போது நடந்த சம்பவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். கருணாநிதி உடல் நலிவுற்று சென்னை கோபாலபுரத்தில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது ஸ்டாலினை தொடர்பு கொண்டு கருணாநிதியைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். உடனடியாக மருத்துவரிடம் கேட்டுவிட்டு, வைகோவை வரச் சொல்லியுள்ளார். யாரையும் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த கருணாநிதி, வைகோவின் கருப்பு துண்டை பார்த்த உடனே கண்டுபிடித்துச் சிரித்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.

அழுதார்
அப்போது கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு வைகோ அழ ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து முதல்வர் கூறுகையில், "அவர் அழத் தொடங்கியதும்.. நான் பக்கத்தில் இருந்து தட்டிக் கொடுத்து அண்ணா அழாதீங்க எனச் சமாதானப்படுத்தினேன். இன்னும் அந்த காட்சி எனக்குப் பசுமையாக இருக்கிறது" என்று நினைவு கூர்ந்தார். இதைக் கேட்ட அங்கிருந்த தொண்டர்கள் கலங்கிப்போனார்கள்.












Click it and Unblock the Notifications