உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை.. பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு, வைரமுத்து இரங்கல்
சென்னை: உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை என மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் மகாராணி எலிசபெத் கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 96.
வயது முதிர்வு உள்பட சில காரணங்களால் அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஓராண்டாக அவருக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பொது நிகழ்ச்சியை தவிர்த்து வந்த அவர் கடந்த வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார்.
சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்!
உலக தலைவர்கள் அஞ்சலி
மகாராணி 2ம் எலிசபெத்தின் உடல் லண்டனில் அரச குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இன்னும் உலக தலைவர்கள், மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். மகாராணி எலிசபெத் மறைவால் தற்போது இடைக்கால மன்னராக எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் செயல்பட்டு வருகிறார்.
நாளை இந்தியாவில் துக்க நாள்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் செப்டம்பர் 11ம் தேதி ஒருநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளை அனைத்து கட்டிடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் மேலும் அன்றைய தினம் அதிகாரபூர்வ அரசு விழா எதுவும் இருக்காது.
வைரமுத்து இரங்கல்
இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பிரிட்டன் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛எழுபது ஆண்டுகள் அரசாண்ட முதல் அரசி. 17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவப்பணி செய்த முதல் அரண்மனைப் பெண். அரசி எனில் தானே என உலகை உணரவைத்த முதல் ராணி. உங்களோடு கை குலுக்கியது என் உள்ளங்கைப் பெருமை. உங்கள் புகழை காலம் சுமந்து செல்லும்'' என தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் இரங்கல்
முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் பிரிட்டன் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், ‛‛பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்கள் நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்த இரண்டாவது எலிசபெத்தின் முடிவுக்கு வந்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் பொது வாழ்க்கையில் கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார்'' என தெரிவித்து இருந்தார்.