தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு.. “இந்த” கோணத்திலும் போலீஸ் விசாரிக்கனும் - வன்னியரசு “பரபர” ட்வீட்
சென்னை: 500 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டதாக மும்பை நீதிமன்றத்தில் அந்த அமைப்பின் யஷ்வந்த் ஷிண்டே அளித்த வாக்குமூலத்தை நினைவுபடுத்தி இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக - கேரள பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.

சென்னையில் தாக்குதல்
இந்த நிலையில் சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் நள்ளிரவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாம்பரம் பகுதி சங்சாலக் மாவட்ட தலைவரான சீதாராமன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் எரிப்பு
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சிவசங்கர் என்பவரது காரும் எரிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியிலும் பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் செந்தில்பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர்.

தொடரும் தாக்குதல்
இதேபோல் நேற்று மதுரையிலும், கன்னியாகுமரியிலும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது தொடர்பாக நேற்று தலைமைச் செயலாளரும் ஆலோசனையில் ஈடுபட்டார். குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வன்னியரசு
இதுகுறித்து ட்விட்டரில் கருத்திட்டுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு, "கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதை வைத்து பீதியை கிளப்பி வருகிறது சங்கத்துவக்கும்பல். மும்பை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 29 ம்தேதி யஷ்வந்த் ஷிண்டே எனும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் இந்தியாவில் 500 இடங்களுக்கும் மேலாக குண்டு வைக்க RSS பயிற்சி அளித்தது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

போலீஸ் விசாரணை
தமிழ்நாடு காவல்துறை இந்த கோணத்திலும் குண்டுவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் மாலேகான் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வைத்தது சங்கத்துவக்கும்பல் தான்." என்று குறிப்பிட்டு உள்ள அவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்துத்துவ அமைப்புகளுக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்களுக்கும் தொடர்புடையதாக தான் எழுதிய கட்டுரையையும் பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications