தமிழினத்தின் மதச்சார்பற்ற பெருவிழா பொங்கல்! சாதி- மத அடையாளங்கள் அற்ற மக்கள் விழா!
சென்னை: தமிழினத்தின் மதச்சார்பற்ற பெருவிழா பொங்கல் விழா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளிலேயே பொங்கல் பெருவிழா மட்டும்தான், பிற வகையிலான கலாச்சாரக் கலப்போ, ஆதிக்கமோ இல்லாத தனித்துவம் வாய்ந்த மக்கள் விழா எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
பொங்கல் வாழ்த்து
தலைமுறை தலைமுறையாய் தமிழ்ப்பெருங்குடி மக்கள் கொண்டாடி வரும் அறுவடைத் திருவிழாவான பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உலகமெங்கும் பரந்து வாழும் ஒட்டுமொத்த எம் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்கழி இறுதிநாள்
அத்துடன், மார்கழியின் இறுதிநாளில் பயனிலாப் பழையன யாவற்றையும் கழித்து, பயனுள்ள புதியன யாவற்றையும் ஏற்கும் தை முதல்நாளில் யாவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளிலேயே பொங்கல் பெருவிழா மட்டும்தான், பிற வகையிலான கலாச்சாரக் கலப்போ, ஆதிக்கமோ இல்லாத தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
சாதி- மத அடையாளம்
இவ்விழா சாதி- மத அடையாளங்கள் இல்லாமல் இயற்கையைப் போற்றுகிற ; உழைப்பை மதிக்கிற; மூத்தோரை வணங்குகிற; பெண்மையைச் சிறப்பிக்கிற ஒரு மகத்தான திருவிழாவாகும். குறிப்பாக, மதச்சார்பின்மைக்குச் சான்றாக விளங்கும் ஒரு மாபெரும் மக்கள் விழாவாகும். தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் ஊடுருவி மெல்ல மெல்ல அவற்றைச் சிதைக்கும் சதிச்செயல்களில் சனாதன சக்திகள் தொடர்ந்து ஈடுபட்டுவருவதை இச்சூழலில் தமிழினம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை
குறிப்பாக, திருவள்ளுவரையும் பாரதியையும் அவர்கள் கையிலெடுக்க முனைவது அத்தகைய உள்நோக்கத்துடன் தான் என்பதை நாம் உணரத் தவறினால், காலப்போக்கில் நமது பெருமைக்குரிய பொங்கல்விழாவையும் மதம் சார்ந்த ஒரு பண்டிகையாக மாற்றிவிடுவார்கள். நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டுவரும் பொங்கல் பெருவிழாவின் மூன்றாம் நாள் விழாவில் நாம் முதன்மைப்படுத்தும் ஏருழும் எருதுகளையும், ஏறுதழுவுதல் நிகழ்வின்போது துள்ளிப் பாயும் (ஜல்லிக்கட்டு) காளைகளையும் பண்டிகையிலேயே இல்லாது செய்து நமது பாரம்பரியக் கூறுகளைச் சிதைத்து விடுவர்.
எனவே, தமிழினத்தின் மதசார்பற்ற பெருவிழாவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு பொங்கல் பெருநாளைக் கொண்டாடுவோமென யாவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.