பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு... மண்ணின் மக்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருக -வேல்முருகன்
சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, மண்ணின் மக்கள் மட்டுமே எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளி மாநிலத்தவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.
கர்நாடகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மண்ணின் மக்கள் மட்டுமே அரசுத்தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
புரட்டாசினு ஒரு மாசம் விட்டு வச்சா... அநியாயத்துக்கு இப்டி வளர்ந்து நிக்குது இது!
ஒத்தி வைப்பு
கடந்த 2017-ல், தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றனர். இவ்விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் இன்னும் பிற கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதோடு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீண்டும் வாய்ப்பு
இந்த நிலையில், தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, வரும் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடக்கவுள்ளதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வில், வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி
வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட , தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் தேர்வெழுதலாம் என்ற விதி இன்றும் மாற்றப்படாமல் இருக்கிறது.
ரத்து செய்க
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மறுத்தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தவரும் தேர்வு எழுதும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.