நீதிக்கு கிடைத்த வெற்றி.. வக்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விஜய் கருத்து
சென்னை: வக்பு திருத்த சட்டம் (Waqf Amendment Act) குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். நீதி அரசமைப்பின் மதிப்பு, அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான மகத்தான வெற்றி என்றும், சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் விதிகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வந்தது. வக்பு வாரிய திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிப்பதாக இருப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

உச்ச நீதிமன்றம் உத்தரவு
குறிப்பாக வக்பு வாரியச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இதில், வக்பு வாரியச் சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க எந்தவொரு முகாந்திரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. அதே நேரத்தில், வக்பு வாரியச் சட்டத்தின் சில குறிப்பிட்ட விதிகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதாவது, புதிய சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஒரு முக்கிய கருத்தை கூறினர்.
டிவிகே விஜய் வரவேற்பு
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை ஒரு மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது. இது அதிகாரப் பிரிவினையை மீறும் செயல். ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்கள் அளிக்கும் விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியிருப்பதாவது:- "சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, நீதி, அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான மகத்தான வெற்றியை குறிக்கிறது. சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் விதிகளை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள அம்சங்களையும் குறிப்பிட்டுள்ள விஜய், நீதிமன்றத் தீர்ப்பு மூலம் கிடைத்திருக்க கூடிய இந்த வெற்றிக்கு பங்காற்றிய சட்டக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications