திருப்பதி கோவில் மாட வீதியில் "செருப்பு" அணிந்த சர்ச்சை..மன்னிப்பு கேட்டார் விக்னேஷ் சிவன்
கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோயில் வளாகத்தில் போட்டோ எடுத்தபோது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி மாடவீதியில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் செருப்புடன் நடந்ததாக எழுந்த சர்ச்சை எழுந்தநிலையில், அது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோயில் வளாகத்தில் போட்டோ எடுத்தபோது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
சினிமா நட்சத்திரங்களான நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்கேஷ் சிவன் இடையிலான திருமணம் மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாரூக்கான உள்ளிட்ட பலரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரம்மாண்ட திருமணம் பற்றியும் விருந்து நிகழ்ச்சிகளைப் பற்றிதான் பலரும் பேசி வருகின்றனர். ஆதரவற்ற ஒரு லட்சம் பேருக்கு விருந்து பரிமாறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

திருப்பதி தரிசனம்
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அடிக்கடி திருப்பதி பயணம் செல்வார்கள். புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். அது போல திருமணம் முடிந்த கையோடு தங்களது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய நேற்று திருப்பதிக்கு வந்திருந்தனர்.

மாட வீதியில் செருப்பு அணிய தடை
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சாமி தரிசனம் செய்துவிட்டு இருவரும் மாடவீதி வழியாக நடந்து வந்தனர்.அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களுடன் போட்டோ எடுக்க வந்த புகைப்படக்காரர்களும் காலில் செருப்புடன் நடந்து வந்தனர். மாட வீதியில் செருப்பு அணிந்து நடக்க வேண்டாம் என்று ஆங்காங்கே போர்டுகள் வைக்கப்பட்டிருந்தும் இவர்கள் செருப்பு அணிந்து நடந்தது சர்ச்சையானது.

திருப்பதி தேவஸ்தானம் விசாரணை
இதுதொடர்பாக விசாரணை நடத்தி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி, ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

போட்டோ ஷூம் நடத்த அனுமதி
பெரிய அளவில் போட்டோஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இதுபோல் யாரும் ஏழுமலையான் கோவில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது. எனவே இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
நடந்த செயலுக்காக மன்னிப்பு கோருகிறோம் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். விஷ்ணு சிவன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில்,திருமணம் நடந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம். அதன்பின் கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர். எனவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம். எங்களைப் பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம்.

திருப்பதியில் திருமணம் நடத்த முடியவில்லை
இதனால் ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். திருப்பதி மலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கடந்த ஒரு மாதத்தில் 5 முறை திருப்பதி மலைக்கு இரண்டு பேரும் வந்திருக்கிறோம். பல்வேறு காரணங்களால் திருப்பதி மலையில் எங்கள் திருமணத்தை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது என்று அதில் கூறியிருக்கிறார்.

சுப்ரபாத சேவையில் தரிசனம்
இந்த நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் இரண்டு பேரும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் மீண்டும் திருப்பதி மலைக்கு சென்று நாளை அதிகாலை ஏழுமலையான் சுப்ரபாதம் சேவையில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே திருப்பதி மலையில் அவர்களை சந்தித்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் நடந்த தவறு பற்றி விசாரணை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications