விஜயதசமி..அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவு..பெற்றோர்கள் மகிழ்ச்சி
சென்னை: விஜயதசமி தினமான இன்றைய தினம் ஒரு ஆசிரியராவது இருந்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அரசு பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இன்று கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம்.
தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இதேபோன்ற சூழலில் பல பள்ளிகளில் ஆசிரியர்களே முன்வந்து மாணவர் சேர்க்கை நடத்தியிருந்தனர். இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால் புதன்கிழமை மாணவர் சேர்க்கை நடத்தலாமா என மாவட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
அசுரர்களை சம்ஹாரம் செய்த அம்பிகை..தமிழகமெங்கும் விஜயதசமி கோலாகலம்..கோவில்களில் வித்யாரம்பம்
விஜயதசமி மாணவர் சேர்க்கை
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் வருவர் என்பதால் தொடக்கக் கல்வி இயக்குனர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
தனியார் பள்ளிகளில் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதை பெற்றோர் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகை
முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
வெற்றி தரும் விஜயதசமி
விஜயதசமி பண்டிகை வெற்றி தரும் திருவிழாவாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எந்த நல்ல காரியத்தையும் தொடங்கினால் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை எனவேதான் இந்த நாளில் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கின்றனர். தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறையும் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.