'விநாயகருக்காக' வீடு தேடி சென்ற முருகன்.. சொன்ன முடிவில் உறுதியாக நின்ற முதல்வர்! அதிர்ச்சியில் பாஜக
சென்னை: அடுத்தடுத்த வலதுசாரி அமைப்பினர், வீட்டுக்கு சென்று கேட்டுக் கொண்டும் ஒப்புக்கொள்ளவில்லை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. இறுதியாக பாஜக தலைவர் எல்.முருகன், தானே நேரடியாக முதல்வர் இல்லத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. அப்படியும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவ கூடாது என்று அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய முதல்வர் தயாராக இல்லையாம்.
கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை போது பொது இடங்களில் சிலைகளை நிறுவ கூடாது, வீடுகளுக்குள்ளேயே மக்கள் கொண்டாடி கொள்ளலாம் என்று தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்றும், தடையை மீறி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வோம் என்றும், இந்து அமைப்புகள் பலவும் எச்சரித்துள்ளன. அரசின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தையும் நாடி உள்ளன சில அமைப்புகள். இருப்பினும், அரசு அனுமதி பெற்று விட வேண்டும் என்பதற்காக முதல்வரிடம் நேரில் சென்று வலியுறுத்த ஆரம்பித்தனர் வலதுசாரி அமைப்பினர்.

இந்து அமைப்புகள்
இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் இரு தலைவர்கள் முதல்வரை சந்தித்து திங்கள்கிழமையான நேற்று, இந்த கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருக்கிறது அரசு. உத்தரவை வாபஸ் பெறப்போவதில்லை என்று முதல்வர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

உறுதிகாட்டும் முதல்வர்
இந்த தகவல் கிடைத்த பிறகுதான் இரவோடு இரவாக சுமார் 7 மணியளவில் பாஜகவின் மாநில தலைவர் முருகன், தானே நேரடியாக முதல்வரின் கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு விரைந்தார். சுமார் அரை மணி நேரமாக, எடப்பாடி பழனிச்சாமியுடன் அவர் இந்த விஷயம் பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் தனது முடிவில் மிகவும் உறுதி காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிகொடுக்காத முருகன்
முதல்வர் இவ்வாறு உறுதி காட்டியதால்தான் நிருபர்களிடம் பேசிய முருகன் இதுபற்றி எந்த ஒரு பிடியும் கொடுக்கவில்லை. முதல்வருடன் தான் எந்த மாதிரி பேச்சுவார்த்தை நடத்தினேன் என்பதை மட்டும்தான் அவர் கூறினார். அதாவது, உரிய கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு பக்தர்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் நிபந்தனைகளை மீறி நடக்க மாட்டார்கள் என்று உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் முதல்வர் கண்டிப்பாக அரசு உத்தரவை வாபஸ் வாங்குவார் என்ற உறுதியை முருகன் அளிக்கவில்லை.
Recommended Video

அதிருப்தியில் பாஜக
வலதுசாரி அமைப்பினர் மற்றும் பாஜக தலைவர் ஆகியோர் அடுத்தடுத்து கோரிக்கை வைத்தும் அசைந்து கொடுக்கவில்லையாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் பாஜக தலைவர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இனிமேல் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதை பொறுத்துதான் முடிவு எடுக்க முடியும் என்று பாஜகவினர் யோசித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications