காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி-அதிமுகவுக்கு செக்? சசிகலா மடல்
புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா? என்று நமது எம்ஜிஆர் நாளிதழில் அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.
சென்னை: ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சசிகலா. காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி என்றும் அதிமுகவினருக்கு நமது எம்ஜிஆர் நாளிதழில் கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.
நான்காண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய சசிகலா அரசியலில் முழுநேரமாக ஈடுபடுவேன் என்று கூறினார். திடீரென அறிக்கை வெளியிட்டு அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக பயணம் மேற்கொண்டார். சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது.
சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது அதிமுக. பொன்விழா கொண்டாடும் அதிமுகவின் படுதோல்வி அந்த கட்சியினரே எதிர்பாராதது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதிமுக பொன்விழா நாளில் கல்வெட்டுக்களையும் திறந்து வைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகலாவை பொதுவெளியில் பார்த்த தொண்டர்கள் உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்தனர்.

சசிகலா கடிதம்
நிறை அன்புடைய சகோதர.. சகோதரிகளே! கழகத்தின் பேரன்புத் தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம் என்று தொடங்குகிறது அந்த கடிதம். தொடர்ந்து, "இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம்.

கரம் கோர்ப்போம்
அண்ணா கண்ட வழியில்... புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம்.

எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே
புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?, மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அஇஅதிமுக நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள்" என்றும், 'காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஒன்றுபடுவோம்...வென்று காட்டுவோம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,"ஒன்றுபடுவோம்...வென்று காட்டுவோம்..தலைவர் புகழ் ஓங்கட்டும்...தலைவி புகழ் நிலைக்கட்டும்...எனவும் கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.












Click it and Unblock the Notifications