தமிழகத்தில் 537 வாக்குச்சாவடிகள் "மிகவும்" பதற்றமானவை.. 10,813 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை
சென்னை: தமிழகத்தில், 10 ஆயிரத்து 813 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
நாளை தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று நிருபர்களை சந்தித்தார் சத்யபிரதா சாகு. அப்போது அவர் கூறுகையில்,
மைக்ரோ அப்சர்வர் என்ற பெயரிலான கண்காணிப்பாளர்கள் தமிழகம் முழுக்க உள்ள வாக்குச் சாவடிகளில் பதற்ற நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
537 வாக்குச்சாவடிகள், மிக பதட்டமானவையாகும், 10813 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சிறு அளவுக்கு வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருப்பதாகவும், மொத்தம் 1, 29,165 மிண்ணணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 75, ஆயிரத்து 521 ஊழியர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். காவல்துறை தரப்பில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
50 சதவீத வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.