வழக்கம் போல திமுக, அதிமுக இரு அணிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை... போட்டுடைக்கும் விஜயகாந்த் மகன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக இரு அணிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது திமுகவுடன் படுமும்முரமாக தேமுதிக பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் தேமுதிக கேட்ட தொகுதிகள் கிடைக்காது என தெரிந்த நிலையில் அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
திமுக, அதிமுக இரு கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய 'பெருமையை' பெற்றது தேமுதிக. இது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் அதிமுக அணியில் கடைசியில் ஐக்கியமானது.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
40 தொகுதி கேட்ட தேமுதிக
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அதிமுக அரசின் மீது விமர்சனம், 40 தொகுதிகள் தந்தால் மட்டுமே கூட்டணி என குரலை உயர்த்தியது தேமுதிக. இது அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்தது.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை
இன்னொரு பக்கம் வழக்கம் போல திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்க்கிறது தேமுதிக. இந்த நிலையில் தந்தி டிவியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன், தேர்தல் கூட்டணி தொடர்பாக கூறியதாவது:
40 தொகுதிதான் வேண்டும்
எங்களுக்கு ஏன் 40 தொகுதியை தர வேண்டும் என அதிமுக, திமுக கேட்டால் அவர்களுக்கான உரிய பதிலை தேமுதிக தரும். அதிமுக, திமுக இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்க வேண்டும் என்கிற கருத்து கட்சியில் இருக்கிறது. இருந்த போதும் விஜயகாந்த் எடுக்கிற முடிவுதான் இறுதியான முடிவு. அதற்கு தொண்டர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.
தேமுதிக தலைமையில்தான் 3-வது அணி
அதேநேரத்தில் 3-வது அணி என ஒன்று அமைந்தால் அது நிச்சயம் தேமுதிக தலைமயில்தான் அமையும். ஏனெனில் கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலேயே கட்சி தொடங்கி வெற்றி பெற்றவர் விஜயகாந்த். அதேநேரத்தில் திமுக, அதிமுக அணியில் இடம்பெற்றால் அவர்களது முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு விஜய் பிரபாகரன் கூறினார்.