100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை செயல்படுத்துவோம்: அமைச்சர் சேகர்பாபு
யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாட்களில் நிறைவேற்றுவோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது.
சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வளாகங்கள், கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது.
மீட்கப்பட்ட கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தவறு யார் செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு அரசாணை
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. அதில் 206 பேர் பயிற்சி பெற்றார்கள்.

பணி வழங்கப்படும்
இதனிடையே அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, படித்து முடித்த மாணவர்களை அர்ச்சகராகப் பணியமர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அந்த அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும்கூட பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதில் அப்போதய அதிமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

கோவில் சொத்துக்கள் மீட்பு
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தரப்படும். விரைவில் வடபழனி கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அன்னதானத்திட்டம்
திருக்கோயில்களில் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி 14ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன்பின் அன்னதான திட்டத்தை தொடருவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மக்களின் பசி பிணி நீக்கும் அமுதசுரபியாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். சென்னையில் உணவு இல்லை என்ற நிலை கிடையாது. தேவைப்பட்டால் அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் ஆட்சியாக தி.மு.க இருக்கிறது என்றார்.

மெயின் பிக்சர்
திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைந்துள்ளது. பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுநாள் வரை பார்த்தது வெறும் ட்ரெயிலர்தான். இனிதான் மெயின் பிக்சரைப் பார்ப்பீர்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications