தேர்தல் முடிவுக்கு மூன்றே நாட்கள்.. தமிழகத்தில் புதிய அரசிற்கு காத்திருக்கும் "சவால்கள்"
சென்னை : தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. 3994 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 71.79 சதவீதம் ஒட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் மே 2 ம் தேதி எண்ணப்பட உள்ளன.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால், ஓட்டு எண்ணிக்கை அன்று கட்டாயம் கடைபிடிக்க பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
இந்த தேர்தலில் 6 பேர் முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். ஆளும் அதிமுக., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போவதாக நம்பிக்கையுடன் உள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இந்த முறை தாங்கள் தான் வெற்றி பெற போவதாக நம்பிக்கையுடன், ஆட்சி அமைத்தவுடன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து திட்டம் வகுத்து வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை...அன்றே சொன்ன ரஜினி...டிரெண்டிங் ஆகும் கடிதம்
வாரி வழங்கிய வாக்குறுதிகள்
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சில சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் மாநில கட்சிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. இவர்கள் தவிர மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். நாம் தமிழர் சீமான் யாருடனும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டார். ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து கட்சிகளும் இலவசங்களையும், பல்வேறு வாக்குறுதிகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போதும் வாரி வழங்கி உள்ளனர். ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை.
யார் வந்தாலும் கஷ்டம் தான்
தற்போதுள்ள சூழ்நிலையில், யார் ஆட்சிக்கு வந்தாலும் புதிதாக அமைய போகும் அரசுக்கு பெரும் சவால்களும், நெருக்கடிகளும் காத்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. அதிலும் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்த சூழலை திறம்பட கையாண்டு, நோயை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இலவசங்கள் வழங்க முடியுமா
ஏற்கனவே நிதிச்சுமையில் தமிழக அரசு இருந்து வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இலவசங்களை வழங்க முடியாது. அதற்கு பதில் கொரோனா பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை அதிகரிப்பதே அத்தியாவசியமாக உள்ளது. குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்காவது இலவச வாக்குதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்தடுத்த கொரோனா அலைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
எதிர்க்கட்சிகளிடம் சிக்கனுமே
ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். தற்போதுள்ள கொரோனா நெருக்கடி காலத்தில் மருத்துவ வசதிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு வைத்தல், நோய் பரவ விடாமல் தடுத்தல் ஆகியவற்றை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். இதற்கிடையே எதிர்க்கட்சிகளையும் சமாளிக்க வேண்டும்.
ஊரடங்கு இல்லாமல் சமாளிக்கனும்
மேலும் கடந்த ஆண்டை போல் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் அது நாட்டின் பொருளாதாரத்தையும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். அதனால் முழு ஊரடங்கை அமல்படுத்தாமலேயே, நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இது புதிதாக அமைய உள்ள அரசிற்கும், அதன் நிர்வாக திறமைக்கும் விடுக்கப்படும் மிகப் பெரிய சவாலாக இருக்கும். தேர்தலில் வெற்றி பெறுவதை விட, வெற்றி பெற்ற பிறகு ஆட்சியை தக்கவைப்பது மிக கடினமானது என அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.
அவ்வளவு சுலபம் அல்ல
ஆனால் தற்போதுள்ள கொரோனா சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் தொங்கு சட்டசபை, பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் ஆட்சி அமைப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். அவர்கள் ஆட்சியை காப்பாற்றுவார்களா, எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகள் மற்றும் எதிர்ப்புக்களை சமாளிப்பார்களா, கொரோனா பரவலை தடுப்பதில் கவனம் செலுத்துவார்களா அல்லது மக்களின் மற்ற பிரச்னைகளை தீர்க்க பார்ப்பார்களா, நிதி சுமையை சமாளிப்பாளர்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இன்னும் காத்திருக்கு பிரச்னை
கொரோனா மட்டும் தான் மிகப் பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்றால் இல்லை. கொரோனாவை தாண்டி நீட் தேர்வு, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவைகளும் உள்ளது. இது தவிர ஊழல் மற்றொரு பிரச்னையாக இருக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணியில் இருக்கும் பாஜக, திமுக எம்.பி., கனிமொழி - ஆ.ராசா மீதான 2 ஜி வழக்கை தூசி தட்டி எடுக்கும். ஒருவேளை திமுக ஆட்சி அமைத்தால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பிரச்னையை கையில் எடுக்கும்.
ஆக மொத்தத்தில் இப்போது யார் ஆட்சியில் அமர்ந்தாலும் வலிகள் நிறைய காத்திருக்கின்றன.. அவற்றுக்கான வழிகளை இரு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே தேட ஆரம்பித்திருப்பார்கள் என்று நம்பலாம்.