பக்கா பிளான்.. ஐபி டூ பிடிஆர் வரை.. துறைகளை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பின்னணியில் இவ்வளவு காரணமா?
சென்னை: உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதன் தொடர்ச்சியாக 4 அமைச்சர்களுக்கு துறை மாற்றம் செய்த முதல்வர் ஸ்டாலின் 5 பேருக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி உள்ளார். ஐ பெரியசாமி முதல் பிடிஆர் வரை பக்காவாக பிளான் போட்டு தனது அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் மாற்றம் செய்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சி நடந்து வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் 33 பேர் செயல்பட்டு வருகின்றனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலினை சேர்த்தால் மொத்தம் 34 பேர் இருந்தனர்.
அமைச்சரான கையோடு உடனே ‛வீடியோகால்’.. யாருக்கு தெரியுமா? ஆளுநர் மாளிகையில் உதயநிதியின் பாசம்
அமைச்சரான உதயநிதி
இந்த அமைச்சரவை தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளால் அனைத்து துறைகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. இதனால் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. சிறிய அளவில் மட்டுமே துறைகள் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் ஸ்டாலின் அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
விளையாட்டு துறை ஒதுக்கீடு
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டங்க் மற்றும் ஊரக கடன்கள் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை அமைச்சர் மெய்யநாதன் நிர்வகித்து வந்ததும், சிறப்பு திட்ட அமலாக்க துறையை முதல்வர் முக ஸ்டாலின் தன்வசம் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பு திட்ட அமலாக்க துறை மிகவும் முக்கியமாகும். அதாவது அரசின் திட்டங்கள் தொடர்பான செயல்பாடுகளை கவனிக்கும் பணியை மேற்கொள்வது தான் இந்த சிறப்பு திட்ட அமலாக்கத்துறையாகும்.
4 பேரின் துறைகள் மாற்றம்
இதேபோல் தமிழக அமைச்சரவையில் இன்று மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 4 அமைச்சர்களின துறைகள் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி அதில் இருந்து விடுவிக்கப்பட்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்ட்டுள்ளது. மேலும் வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் மதி வேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 துறை மாற்றத்தின் பின்னணியில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஐ பெரியசாமிக்கு ஏன் மாற்றம்?
கூட்டுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த ஐ பெரியசாமியின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கூட்டுறவுத்துறைக்கு பதிலாக ஐ பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஐ பெரியசாமி சமீபகாலமாக அதிருப்தியில் இருந்தார். கட்சி மூத்த தலைவராகவும், துணை பொதுச்செயலாளராகவும் இருக்கும் ஐ பெரியசாமி தென்மாவட்டங்களில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் அவர் முதலில் போக்குவரத்து துறையை எதிர்பார்த்ததாகவும், அவருக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. விரும்பிய துறை கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும், தனக்கு வேறு துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது அவருக்கு ஊரக வளர்ச்சி துறை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐ பெரியசாமியை முதல்வர் ஸ்டாலின் சமாதானம் செய்துள்ளார்.
3 பேரின் துறை மாற்றம் ஏன்?
அதேபோல் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோருக்கு இன்று துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் என்பது அவர்கள் நிர்வகித்த துறைகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த 3 பேரும் துறையில் நன்கு செயல்பட்டு இருந்தாலும் கூட துறை ரீதியாக அவர்கள் மேற்கொண்ட பணிகளை ஆராய்ந்து அதில் உள்ள குறை, நிறைகளை ஆராய்ந்து ஸ்டாலின் தற்போது இந்த மாற்றத்தை நிகழ்த்தி உள்ளார். இந்த மாற்றம் என்பது அமைச்சரவை இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
5 பேருக்கு கூடுதல் பொறுப்பு
இதுதவிர அமைச்சர்கள் முத்துசாமி, ஆர்எஸ் ராஜகண்ணப்பன், ஆர் காந்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சரவையின் செயல்பாட்டை இன்னும் நேர்த்தியாக கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதோடு கடினமாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படும் அமைச்சர்களுக்கு நிச்சயம் பரிசு வழங்கப்படும் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் தனது செயல்பாடு மூலம் அறிவித்துள்ளார்.
சேகர்பாபுவுக்கு கூடுதல் துறை
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அவருக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சிஎம்டிஏ) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேகர்பாபு சென்னையை சேர்ந்தவர். இவர் துறைமுகம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வானார். வடசென்னையில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவரான சேகர்பாபு, சென்னை கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளராகவும் உள்ளார். தற்போது சென்னை மாநகராட்சி மேயராக உள்ள பிரியாவுக்கு அந்த பதவி கிடைக்க சேகர்பாபு தான் முக்கிய காரணமாகும். பிரியா கவுன்சிலராக உள்ள வட சென்னை திருவிக நகர் தொகுதியின் 74வது வார்டு சேகர்பாபு மாவட்ட செயலாளராக உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்துக்குள் வருகிறது. மேயராக பிரியா உள்ள நிலையில் தான் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சேகர்பாபுவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த துறை தான் சென்னையில் செயல்படுத்துப்படும் திட்டங்களை கவனிக்கும். தற்போது பிரியா மேயராக உள்ள நிலையில் சேகர்பாபுவுக்கு இந்த துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை மாநகராட்சி பகுதியில் இனி வளர்ச்சி திட்டங்கள் வேகமாக நடக்கலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கணக்கிட்டு மாற்றத்தை கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளார்.
பிடிஆர் கூடுதல் துறை ஏன்?
அதேபோல் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். இவருக்கு தற்போது ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் மற்றும் புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் பொருளாதாரம், நிதி திட்டங்கள் பற்றி எப்போதும் புள்ளி விபரமாக பேசி வருகிறார். திமுகவை யாரும் சீண்டினாலும் கூட புள்ளி விபரங்கள் அடிப்படையில் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு புள்ளியியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையில் அரசு சிக்க ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால நன்மைகள் தான் முக்கிய காரணமாக இருப்பதாக சொல்லபடுகிறது. தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக கூறிய நிலையில் தான் தற்போது அந்த துறை பிடிஆர் வசம் சென்றுள்ளது. இதனால் விரைவில் ஓய்வூதியம் சார்ந்து ஏதேனும் புதிய அறிவிப்புகள் அரசு சார்பில் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
3 பேருக்கு கூடுதல் பொறுப்பு ஏன்?
மேலும் சாதிரீதியாக திட்டியதாக சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஆர்எஸ் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சாராக உள்ளார். இவர் மூத்த தலைவராக இருந்தபோதும் நல்ல துறை கிடைக்கவில்லை என நினைத்து இருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு அமைச்சர் முத்துசாமி வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு ஊரக வீட்டு வசதி, நகரமைப்பு திட்டமிடுதல், இடவசதி கட்டுப்பாடு உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கைத்தறி மற்றும துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்திக்கு அவரது செயல்பாட்டின் அடிப்படையில் பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரின் செயல்பாட்டு அடிப்படையில் இருவருக்கும் கூடுதல் துறை வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரே கல்லில் பலமாங்காய்கள்
மேலும் தற்போதைய மாற்றங்கள் என்பது யாரையும் பெரிய அளவில் பாதிக்காத நிலையில் உள்ளது. தற்போதைய அமைச்சரவையில் செயல்பாடு சரியில்லை என ஒருவரை நீக்கினால் அவரது தரப்பிடம் இருந்து எதிர்ப்பை அரசு சம்பாதிக்க வேண்டி இருக்கும். இதனால் முதல்வர் ஸ்டாலின் மிகவும் கவனமுடன் துறை மாற்றத்தை கையாண்டுள்ளார். அதோடு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற ஒற்றை நிகழ்வில் அதிருப்தியில் இருந்த தலைவர்களை சமாதானப்படுத்தவும், நன்கு செயல்பட்டவர்களுக்கு கூடுதல் துறையும் ஒதுக்கியதோடு, செயல்பாடு சரியில்லாவிட்டால் துறை மாற்றியமைக்கப்படும் எனும் எச்சரிக்கை என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.