பொன்னையன் சொன்னது..அதை விடுங்க அரசியல்ல சகஜம்..பெருசா எடுத்துக்கல..சட்டென சொன்ன அண்ணாமலை
பாஜக ஒருபோதும் பிரித்து வைத்து குளிர்காயாது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறியாமலேயே ஊடகங்களில் பேட்டி கொடுக்கின்றனர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கருத்துக்களை பதிவிடுகின்றனர் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஒரு கட்சியை உடைத்து அதை பலவீனப்படுத்திதான் பாஜக வளர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக பற்றி பொன்னையன் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சார களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிக்குழுவையும் நியமனம் செய்துள்ளது.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை இரு அணிகளுமே கேட்டால் சின்னம் கண்டிப்பாக முடங்கும் சூழ்நிலை உருவாகும். சின்னம் முடங்கினால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருமே சுயேச்சை சின்னத்தில்தான் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.
பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்திற்காக என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் டெல்லி சென்று இருந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், பாஜக வட மாநிலங்களில் எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது. பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சியை எப்படி பாஜக பிடித்தது என்பது எங்களுக்கும் தெரியும்... மக்களுக்கும் தெரியும்... உங்களுக்கும் தெரியும்... எனவே நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக தான் நின்றது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். இதன் காரணமாக பாஜக எங்களுடன் பணியாற்ற விரும்பலாம். காத்திருந்து பாருங்கள். திமுகவைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்று பட வேண்டும் என்று பாஜக விரும்புவது குறித்து இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்து கூறியது அதிர்வலைகளை உருவாக்கியது.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார். தனித்தனியாக போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு இருக்காது என்றும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார் அண்ணாமலை.
அப்போது செய்தியாளர்கள் சிலர், நேற்றைய தினம் பாஜக பற்றி அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் கூறியது பற்றி கேள்வி எழுப்பினர். அதை கேட்ட அண்ணாமலை, அதை விடுங்க..அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று கூறினார். அவர் ஏற்கனவே பேசியதாக வெளியான ஆடியோவையே நான் பேசவில்லை அது என்னுடைய குரல் இல்லை என்றும் கூறினார். அதற்குள் நான் போக விரும்பவில்லை.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பீகாரில் பாரதிய ஜனதா கட்சி நிதிஷ் குமார் கட்சியுடன் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றால் நிதிஷ்குமார்தான் முதல் அமைச்சர் என்று கூறி இணைந்து தேர்தலை சந்தித்தோம். தேர்தல் முடிந்த பின்னர் நிதிஷ்குமாரை விட அதிக இடங்களில் பாஜக வென்றது. கூட்டணி தர்மத்திற்காக சொன்னது போல நிதிஷ்குமார் முதல்வராக பாஜக ஆதரவு அளித்தது. அதே நேரத்தில் யாரை பகையாளி என்று சொன்னாரோ அதே லாலு பிரசாத் யாதவ் மகனுடன் இணைந்து கொண்டு பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகினார்.
முதலில் சரித்திரத்தை சரியாக படிக்க வேண்டும். கண்ணாடி போட்டு லைட் போட்டு படிச்சிட்டு வாங்க என்று கூறினார் அண்ணாமலை. பிராந்திய கட்சிகளுக்கு பாஜக என்ன செய்திருக்கிறது என்று தெரியும். மகாராஷ்டிராவில் பாஜக உடன் உத்தவ் தாக்கரே கூட்டணி ஒப்பந்தம் போட்டு தேர்தலை சந்தித்தார். வெற்றி பெற்ற பிறகு ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என்று சொன்னதால் முறிந்து போனது. சரித்திரத்தை சரியா படிங்க..தப்பு தப்பா சரித்திரம் படித்தால் இப்படித்தான் தப்புத்தப்பாக பேசுவார்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications