அந்த 24 மணி நேரம் என்ன நடந்தது? பார்க்க கூட நேரம் தராத ஆர்.என் ரவி.. தீவிரமாக முயன்ற திமுக.. பின்னணி
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்காதது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி முன் மொத்தம் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா தொடங்கி விலங்குகள் பல்கலைக்கழக, சட்டத்துறை பல்கலைக்கழக உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மசோதாக்கள் உள்ளன. இதில் 10 மசோதாக்கள் பல்கலைக்கழக நியமன மசோதாக்கள்தான்.
ஆளுநர் 'வாரிசு’ பதவியில்லை.. கவர்னர் பதவி என்பதே காலாவதியானதா? கனிமொழியால் கடுப்பான தமிழிசை!
ஆளுநர் ஆர். என் ரவி
அதாவது துணை வேந்தரை ஆளுநர் அல்லாமல் முதல்வர் நியமிக்கும் மசோதாக்கள். இந்த 10 மசோதாக்களும் கிடப்பில் உள்ளன. அதிலும் மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா 1020 நாட்களாக கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக ஆளுநர் ஆர். என் ரவி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அவரின் செயல் மிகவும் தவறானது என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் புகார் வைத்துள்ளனர். இது அனைத்தையும் மொத்தமாக லிஸ்ட் போட்டு திமுக கூட்டணி தங்கள் மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளது.
மசோதா
அதோடு ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ஆன்லைன் தடைக்கான அவசர சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் அந்த சட்டம் காலாவதியாகி இருக்கிறது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு அதன்பின் அவசர சட்டசமாக கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டசபையிலும் இது நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது.
ஆன்லைன் ரம்மி
தமிழ்நாடு அரசு இது தொடர்பாக ஆளுநருக்கு விளக்கம் அளித்தும் கூட ஆளுநர் ஆர். என் ரவி மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்காதது குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, ஆன்லைன் ரம்மி தொடர்பாக பேச தமிழ்நாடு அரசு முயன்றது. ஆளுநர் விளக்கம் கேட்டதும் இது தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அதோடு ஆளுநரை சந்தித்து விளக்கம் கொடுக்க சட்டத்துறை அமைச்சர் நேரம் கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. அவரை சந்திக்க கூட அனுமதி கிடைக்காத சூழல்தான் இருக்கிறது.
தீவிர எதிர்ப்பு
ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நாங்கள் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறோம். நாங்கள் அவசர சட்டம் இயற்றிய போது அதற்கு உடனே ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆனால் அதன்பின் மசோதாவை நிறைவேற்றினோம். இந்த மசோதாவை சட்டமாக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் இது தொடர்பாக எங்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்காக 24 மணி நேரத்தில் நாங்கள் பதில் அளித்து இருந்தோம். இருந்தும் கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
விரைவில் ஒப்புதல்
விரைவில் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம், என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காரணமாக தமிழ்நாடு அரசுக்கும் - ஆளுநர் தரப்பிற்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில் கேரளாவில் பேசுகையில் ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. பவர் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவர் தனது பவரை காட்டும் விதமாக இந்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு, அதன்பின் விளக்கம் வந்தும் அதை டெல்லிக்கு அனுப்பாமல் ஒரு சட்டத்தையே முடக்கி இருக்கிறார் என்கிறார்கள்.