பிளான் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா? மூச்சு விடாமல் பேசிய ஓபிஎஸ்! சரிங்கண்ணே! திரும்பி போன மாஜிக்கள்
சென்னை: அதிமுகவில் நடைபெற்ற உள்கட்சி தேர்தலில் தேர்வான நிர்வாகிகளை முறையாக பொறுப்பில் நியமிப்பது தொடர்பாக டாப் தலைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக கையெழுத்து விவகாரம் ஒன்று கட்சிக்குள் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுக உட்கட்சி தேர்தல் தேர்தல் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவின் அமைப்பு சார்ந்த 25 மாவட்டங்களில் இதுவரை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.

எத்தனை மாவட்டம்
அதிமுகவில் அமைப்பு சார்பாக மொத்தம் 74 மாவட்டங்கள் உள்ளன. இன்னும் 49 மாவட்டங்களில் தேர்தல் நடக்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தலாமா என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சசிகலா பற்றியும் தீவிரமாக ஆலோசனைகள், விவாதங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கோபத்துடன் பாதியில் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

முடியாத மோதல்
அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையிலான மோதல் இப்போதும் சத்தமில்லாமல் நீடித்தபடி இருக்கிறது. உள்கட்சி தேர்தலில் 95 சதவீதம் தனது ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு எடப்பாடி காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப, முதல்கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் 25 மாவட்ட தேர்தலில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிர்வாகிகளின் பட்டியலில் எடப்பாடியின் ஆதரவாளர்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

எடப்பாடி ஆதரவாளர்கள்
இதற்கு ஒப்புதல் அளிக்கச் சொல்லி எடப்பாடியால் அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலுக்கு ஓபிஎஸ் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக எடப்பாடி தரப்பு அதிருப்தியில் உள்ளதாக தெரிந்தது. இதையடுத்து ஓபிஎஸ்சிடம் பஞ்சாயத்து பேச அதிமுகவின் "மணியான மாஜி அமைச்சர்கள்" இருவரையும் அனுப்பி வைத்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

மாஜி அமைச்சர்கள்
சமீபகாலமாக, எடப்பாடியின் நட்பில் இருந்த அந்த மாஜிக்கள் இருவரும் அந்த வளையத்தில் இருந்து வெளியே வந்து விட்டாலும் கூட , பழைய பாசத்தால் எடப்பாடிக்காக ஓபிஎஸ்சிடம் பேசியிருக்கிறார்கள். அந்த சந்திப்பில், " இனியும் நான் அமைதியாக இருக்க முடியாது. "அவரின்" திட்டம் என்னன்னு எனக்கு தெரியாமல் இல்லை. கட்சியிலிருந்து என்னை நீக்க வேண்டும்னு நீங்கள் யோசித்து வைத்துள்ளீர்கள். என்னை நீக்கணும்னா பொதுக்குழு கூடணும்.

பொதுக்குழு கூடணும்
பொதுக்குழுவில் நீங்க நினைப்பது நிறைவேறணும்னா மெஜாரிட்டி ஆதரவு உங்களுக்கு இருக்கணும். இதற்காகத்தானே உள்கட்சி தேர்தலில் உங்களுக்கு ஆதரவான நபர்களை சேர்த்து உள்ளார் என்று ஓபிஎஸ் கேட்டதாக தகவல் வந்துள்ளது. மேலும் இதற்காகத்தான் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் கையெழுத்துப் போடச் சொல்கிறீர்கள்! நான் எப்படி கையெழுத்து போடுவேன்? இப்போது உங்களுக்கு புரியாது.

அரசியல் நெருக்கடி
எனக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடி நாளைக்கு உங்களுக்கும் ஏற்படும் என்று மூச்சுவிடாமல் ஓபிஎஸ் பேசியதில் அசந்து போயிருக்கிறார்கள் அந்த மாஜி மணிகள். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது என யோசித்த அவர்கள், "சரிங்கண்ணே... மீண்டும் சந்திப்போம் " என சொல்லிவிட்டு திரும்பியுள்ளனர் மாஜி மணிகள் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி தரப்பு
ஆனால் எடப்பாடி தரப்போ.. கட்சி நல்லதுக்கு தானே செய்கிறோம். இதில் என்ன பிளான் இருக்க முடியும்.. உட்கட்சி தேர்தல் நடந்துவிட்டது. சில இடங்களில் சண்டை வந்தாலும் முறையாகத்தான் தேர்தல் நடந்து இருக்கிறது. நிர்வாகிகள் தேர்தல்படிதான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அவர்கள் பணி நியமனத்தில் கையெழுத்து போடுவதே நல்லது. கட்சிக்கும் நல்லது என்று கூறிதாக தகவல்கள் வந்துள்ளன.












Click it and Unblock the Notifications