அமித்ஷாவுக்கே "ஜெர்க்" தந்த யோகி.. உ.பியில் என்ன நடக்கிறது?.. மோடி நினைத்தது நடக்குமா??
உபியில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது
சென்னை: உபி முதல்வர் யோகி - பிரதமர் மோடி இடையே என்ன தான் நடந்து வருகிறது? விரைவில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் வரும் நிலையில், மோடி அடுத்தக்கட்டமாக என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
ஒரு துறவி மாநில முதல்வராக உயர்வது என்பது அவ்வளவு சுலபமில்லை.. ஆர்எஸ்எஸ் பின்புலமும், பாஜகவின் வலுவும் உள்ள நிலையில் மட்டும்தான், இது சாத்தியமாகும்..!
ஆனால், ஒரு சந்நியாசி இவ்வளவு அதிரடியாக செயல்படுவாரா என்பது தான் ஆச்சரியமானது. ஆரம்பத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை இளைஞர்களை கொண்டே வலுப்படுத்தி கொண்டவர்தான் யோகி ஆதித்யநாத்..! கோரக்பூர் எம்பி தொகுதியை வாரி சுருட்டி தன் கைகளில் இறுக்கமாக வைத்து கொண்டவர்.

முதல்வர்
எனினும், மத்தியில் ஆட்சியை பிடித்ததுமே பாஜகவுக்கு கூடுதல் தைரியம் பிறந்தது.. அதனால்தான், 2017-ல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே, தேர்தலில் நின்று வெற்றியை பெறவும் முடிந்தது.. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் யோகிக்கு இணக்கமான போக்கு இருக்கவும், முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்க, மறுபேச்சின்றி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் யோகி.

வடமாநிலம்
முதல்வரானதுமே இவரது போக்கு, மேலும் மாற தொடங்கியது.. எந்தெந்த வகையில் முடியுமோ, அந்தந்த வகையில், இந்துத்துவ சித்தாந்தத்தை உயர்த்தி பிடித்தார்.. பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவரானார்.. இதனால் மோடியையும் - யோகியையும் பிரித்து பார்க்க முடியாத சூழல் வடமாநிலங்களில் ஏற்பட்டது..

விரிசல்?
அப்படி இருக்கும்போது, திடீரென இவர்களுக்குள் விரிசல் வந்துள்ளது.. அந்த விரிசல் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என்று ஒரு தரப்பு சொல்கிறது.. நாளடைவில் இந்த விரிசல் அதிகமாகும் என்றும் இன்னொரு தரப்பு சொல்கிறது.. அப்படியானால் உபியில் என்னதான் நடக்கிறது? யோகி - மோடி இடையே என்ன நடந்து வருகிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

நெருக்கம்
பிரச்சனை இதுதான்.. குஜராத் ஐஏஎஸ் அரவிந்த் குமார் ஷர்மா என்பவர் மோடிக்கு நெருக்கமானவர்.. இவர் தன்னுடைய பணிக்கு விஆர்எஸ் தந்துவிட்ட நிலையில், இவரை உபி அரசியலில், சட்டமேலவை பாஜக உறுப்பினராக ஈடுபடுத்த பிரதமர் நினைக்கிறார்.. ஆனால், ஏற்கனவே உபி சட்டமேலவையில் 2 துணை முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அவர்களில் ஒருவருக்கு பதிலாக அல்லது அவர்களில் ஒருவராக ஷர்மாவை இணைத்து கொள்ளும்படி யோகிக்கு பிரதமர் மோடி சொல்கிறார்.. ஆனால், இதை யோகி ஏற்க மறுக்கிறார்..

மோடி
இதற்கு காரணம், பிரதமர் மோடி தன்னை கண்காணிக்கவே இப்படி ஒரு நபரை உபிக்கு அனுப்புவதாக யோகி கருதுகிறார்.. எனவே, பிரதமர் மோடியின் விருப்பத்துக்கும் யோகி மறுப்பு சொல்வதாக தெரிகிறது.. இதுதான் மோடி மட்டுமல்லாமல் அமித்ஷாவுக்கே ஷாக் தந்த விஷயம்.

யோகி
இதுவரை மோடியை எதிர்த்து யாரும் பேசியதில்லை.. பிரதமர் ஒரு உத்தரவு போட்டால், அதை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் வந்ததில்லை.. முதல்முறையாக ஒரு மாநில முதல்வர், பிரதமரின் உத்தரவுக்கு செவிசாய்க்காமல் உள்ளார்.. இங்குதான் யோகிக்கான முக்கியத்துவம் உயர்கிறது.. உண்மையிலேயே யோகியை கண்காணிக்க பிரதமர், ஷர்மாவை உபிக்கு அனுப்புகிறாரா என்று தெரியவில்லை.. ஆனால், இந்த 4 ஆண்டு காலத்தில் யோகியின் செல்வாக்கு உபியையும் தாண்டி வளர்ந்துள்ளதாக தெரிகிறது..

மம்தா
மேற்குவங்கத்தில் எத்தனையோ தலைவர்கள் பிரச்சாரத்துக்கு போனார்கள்.. ஆனால், யோகி வந்தபோது, மம்தாவே சற்று ஆடித்தான் போனார்.. அடுத்த 9 மாதங்களில் உபியில் தேர்தல் உள்ள நிலையில், யோகியே மீண்டும் முதல்வராக வெற்றி பெற்று வந்தால், அவரது பலம் மேலும் உயர்ந்துவிடும் என்பதையும் பிரதமர் அறியாமல் இல்லை.. தனக்கு போட்டியாக யாரும் பாஜகவில் இருந்திடக்கூடாது என்பதிலும் மோடி கவனமாகவே இருக்கிறார்..

யோகி
ஒருவேளை யோகியுடன் மோதல் அதிகமானால், அது பாஜகவுக்குதான் மைனஸ் ஆக இருக்கும்.. அதேசமயம், நாளை தேசிய தலைவராக யோகி உருவெடுப்பதையும் கட்டுப்படுத்தும் நிர்ப்பந்தம் மோடிக்கு உள்ளது.. சுருக்கமாக சொல்லப்போனால், யோகியை எதிர்க்கவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் தடுமாற்ற நிலையே காணப்படுகிறது.

அப்பாவி
ஏற்கனவே கொரோனா நேரத்தில் உபி மாநிலத்துக்கு நிறைய கெட்ட பெயர் வந்துவிட்டது.. ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆஸ்பத்திரிகள் தட்டுப்பாடு போன்ற காரணங்களில் நிறைய அப்பாவிகள் உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன.. சடலங்களை கங்கையில் மிதக்கவிட்டு.. இப்படி எத்தனையோ சர்ச்சையில் யோகி சிக்கி உள்ளார்.. இந்த கெட்ட பெயரும் பாஜக தலைமையே சேர்ந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக மோடி என்ன முடிவெடுக்க போகிறார்? யோகியை வருங்காலத்தில் எப்படி கன்ட்ரோல் செய்ய போகிறார்? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!












Click it and Unblock the Notifications