நீங்கள் இந்தியரா? கனிமொழி கருணாநிதியும் இந்தி தெரியாது போடாவும்! ஏர்ப்போர்ட்டில் பற்றிய உணர்வுத் தீ!
சென்னை : இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், மொழிப்போருக்கு பின்னர் மீண்டும் 'இந்தி தெரியாது போடா' என்ற போராட்டத்துக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதியின் ஒற்றை ட்விட்டர் பதிவு தான்.
திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் பாஜக அரசின் இந்தி திணிப்பு, பொது நுழைவுத்தேர்வு மற்றும் புதிய தேசியக் கல்விக்கொள்கை ஆகியவற்றை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தி தெரியாது போடா
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கடந்த மொழிப்போருக்கு பிறகு, இந்தி தெரியாது போடா என்ற உணர்வு போராட்டம் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. இத்தகைய போராட்டங்களுக்கு தொடக்கபுள்ளியாக இருந்தவர் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் #ஹிந்தி_ தெரியாது_போடா #StopHindiImposition என்கிற ஹாஷ்டாக் மூலம் 06/09/2020 திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி,தனது முகநூல் வாயிலாக இந்தி திணிப்புக்கு எதிராகப் பதிவிட்டார்.

கனிமொழி எம்பி
திமுக எம்.பி கனிமொழி இந்தி மொழி தெரியாததால் சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதாவது, இந்தி தெரியாது' என்று கூறியதாலேயே, நீங்கள் இந்தியரா...' என்ற கேள்வியை விமான நிலைய அதிகாரி ஒருவர் தன்னிடம் கேட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், இந்தி தெரிந்தால்தான் இந்தியரா...' என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியிருந்தார் கனிமொழி. இதையடுத்து இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பரபர' விவாதத்தைப் பற்றவைத்தது.

உணர்வு போர்
அதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, மெட்ரோ' பட நடிகர் சிரிஷ் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் I am a தமிழ் பேசும் Indian', இந்தி தெரியாது போடா' என்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்திருந்த புகைப்படங்களை அவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் இந்தி திணிப்பு எதிராக ஒருவகையில் வித்திட்டது கனிமொழி எம்.பி அவர்களின் ஹிந்தி தெரியாது போடா தான்.

திமுக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் இன்று இந்தி திணிப்பையும், நுழைவுத் தேர்வையும் திரும்பப் பெற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞர் அணி, திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தித் திணிப்புக்கு எதிராக, தமிழக அரசியல் களம் எப்போதும் தகித்துவரும் என்பது வரலாறு. அது மீண்டும் இன்று உணர்த்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications