ENDEMICஆக மாறும் கொரோனா.. எண்டமிக் என்றால் என்ன? ஜூரோ கேஸ்களுக்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்து என்ன
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்டமிக் நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ள நிலையில், எண்டமிக் என்றால் என்ன என்ற கேள்வி இயல்பாக எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து வைரஸ் உருமாறிக் கொண்டே வருவதால் கொரோனாவை முற்றிலுமாக தடுக்க நினைப்பது கிட்டதட்ட முடியாக ஒன்றாகவே உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி டெல்டா கொரோனா பரவல் காரணமாக herd immunity எனப்படும் சமூக தடுப்பாற்றலும் அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

சவுமியா சுவாமிநாதன்
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், "அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்கள் தொகைக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை அதன் பரப்பளவு மற்றும் பல்வேறு வகையான மக்களால், நோய் எதிர்ப்புத் திறன் வெவ்வேறு அளவில் இருக்கிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பு ஒருவித எண்டமிக் நிலையை எட்டி வருகிறது. எனவே வைரஸ் பரவல் வரும் காலத்தில் குறையலாம்" என்றார்.

பல்வேறு சந்தேகங்கள்
சவுமியா சுவாமிநாதன் கொரோனாவை எண்டமிக் என்று குறிப்பிட்டுள்ளது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அப்படியென்றால் கொரோனாவை அழிக்கவே முடியாதா? இதேபோல மாஸ்க்குகளை அணிந்து தான் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் சிலர் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர், உண்மையில் எண்டமிக் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

எண்டமிக் என்றால் என்ன
எண்டமிக் தொற்றுநோய் என்றால் அந்த வைரஸ் தொடர்ந்து நமது சமூகத்தில் இருக்கும். ஆனால், அதன் வீரியமும் பரவும் ஆற்றலும் குறைந்துவிடும். சரியான நேரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எண்டமிக் நோய்களால் பெரிய பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். பல ஆயிரம் ஆண்டுகளாக மலேரியா எண்டமிக்-ஆக இருந்து வருகிறது. அது தவிரச் சாதாரண சளி, பெரியம்மை ஆகியவை எண்டமிக்-ஆக நமது சமூகத்தில் தொடர்ந்து இருக்கிறது.
Recommended Video

பல எண்டமிக் தொற்றுகள் உள்ளன
இது மட்டுமின்றி கடந்த காலங்களில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட பறவை காய்ச்சல் எபோலா ஆகியவை கூட இப்போதும் எண்டமிக்-ஆகத் தொடர்கிறது. பல ஆண்டுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வேக்சின் பணிகளால் சின்னம்மை நோயை மட்டுமே நாம் முற்றிலுமாக ஒழித்துள்ளோம். அது தவிர மற்ற அனைத்து தொற்றுகளும் இன்னும் எண்டமிக்காக தொடர்கிறது.

கட்டுப்பாடுகள் குறையும்
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்று பல்வேறு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். herd immunityகான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதால், கொரோனா வைரசுடன் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் வரும் காலங்களிலும் இதேபோல கடுமையான கட்டுப்பாடுகள் இருக்குமா என்றால், கண்டிப்பாக இருக்காது. வைரஸ் பரவலின் வேகமும் வீரியமும் வரும் காலத்தில் குறைய அதிக வாய்ப்புள்ளதால், கட்டுப்பாடுகளும் குறையலாம். அதாவது உலகிலுள்ள அனைவருக்கும் வேக்சின் பணிகள் எந்தளவு சீக்கிரமாக முடிகிறதோ, அந்தளவு விரைவில் இயல்பு நிலை திரும்பும்..!












Click it and Unblock the Notifications