"ஆடு".. வெடித்த மோதல்.. பிடிஆருக்கும் அண்ணாமலைக்கும் இடையில் அப்படி என்னதான் நடந்தது? பின்னணி
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அண்ணாமலைக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இவரின் உடலுக்கு அரசு மரியாதையை மற்றும் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவரின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது பாஜகவினர் இவரின் காரில் செருப்பு வீசி எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மீது இதனால் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது கடுமையான நெருக்கடியை கொடுத்தது.
விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம்.. மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி.. விருதுநகரில் பரபரப்பு!
மோதல்
இந்த செருப்பு நிகழ்விற்கு பின்பாக பல்வேறு இடங்களில் பிடிஆர் அண்ணாமலையை விமர்சனம் செய்யும் வகையில் போஸ்டுகளை போட்டார். அதில் அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் ஆடு என்று குறிப்பிட்டு விமர்சனங்களை வைத்தார். முக்கியமாக சமீபத்தில் இலவச திட்டங்கள் குறித்து வடஇந்திய ஊடகங்களில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றது. இந்த வீடியோவை பகிர்ந்து நபர் ஒருவரை பிடிஆரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஏன்?
அந்த நபருக்கு பதிலடி கொடுத்த போதே அண்ணாமலையையும் பிடிஆர் கடுமையாக தாக்கினார். அந்த ட்விட்டில், வெறுப்புகளை சுமந்து திரியும் மதவெறியர்கள், ரவுடிகள், குற்றவாளிகள், 360 டிகிரி ஆடு மூலம் திரட்டப்பட்ட கும்பல்களை கீழானவர்கள், விரும்பத்தகாதவர்கள் என்று விமர்சனம் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதில் 360 டிகிரி ஆடு என்று கூறி அண்ணாமலையை மறைமுகமாக பிடிஆர் விமர்சித்து இருந்தார்.
பிடிஆர் பதில்
இதையடுத்து பிடிஆரை கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள் பலர்.. ஏன் அண்ணாமலையை ஆடு ஆடு என்று அழைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த பிடிஆர்.. நான் ஏன் ஆட்டை பெயர் சொல்லி அழைப்பது இல்லை?
1) இறந்து போன ராணுவ வீரரின் உடலை வைத்து அவர் பப்ளிசிட்டி தேடுகிறார்.
2) தேசிய கொடி போர்த்திய காரில் அவர் செருப்பை தூக்கி வீச பிளான் போட்டு கொடுத்தார்.
3) மோசமான பொய் சொல்கிறார்.
4) சலசலப்புகளை செய்து வருகிறார்.
இவரை போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த சாபம். பாஜகவிற்கும் அவர் சாபம்தான் என்று பிடிஆர் கூறினார்.
அண்ணாமலை பதில்
இதற்கு அண்ணாமலை அளித்த பதிலில், நீங்களும், உங்கள் கூட்டமும் உங்கள் முன்னோர்களின் இன்ஷியலை வைத்து வாழ்க்கை நடத்தும் கும்பல். உங்களால் என்னை போல சுயமாக உருவாக்கப்பட்ட, விவசாயியின் மகனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உறுப்படியாக ஏதாவது செய்து இருக்கிறீர்களா? நீங்கள்தான் தமிழ்நாட்டின், அரசியலின் சாபம், உங்களை போல நாங்கள் பெரிய பெரிய விமானங்களில் பறக்க மாட்டோம். அப்பறம்.. நீங்கள் என் செருப்பிற்கு கூட தகுதியானவர் கிடையாது என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
விவசாயி மகனா?
இந்த நிலையில் அண்ணாமலையை திமுகவினர் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். உங்களிடம் பல 60 ஏக்கர் நிலம் உள்ளதாக நீங்களே பேட்டியில் கூறியுள்ளீர்கள். அதேபோல் உங்களின் பல கோடி சொத்துக்கள் பற்றி தேர்தல் ஆணையத்ததில் சமர்ப்பித்த சொத்து விவர அறிக்கையில் தாக்கல் செய்துள்ளீர்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் ஒரு விவசாயின் மகன் என்ற பிம்பத்தை ஏற்படுத்த இப்படி எல்லாம் செய்யலாமா? என்று திமுக ஆதரவு நிர்வாகிகள் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளனர்.
செந்தில் குமார்
இதற்கு திமுக எம்பி செந்தில் குமார் அளித்த பதிலில், அண்ணாமலை முற்றிலும் விரக்தியில் பேசுகிறார். அவரது செயல்பாடு குறித்து கட்சி மேலிடம் கோபமாக உள்ளது. .அவரை கண்காணிக்க இணை அமைச்சரை நியமித்துள்ளனர். அதோடு அண்ணாமலையின் அதிகாரங்களை குறைத்துள்ளனர். அவர் தனது மேலிடத்தை திருப்திப்படுத்த டேமேஜ் கன்ட்ரோல் செய்வதாக நினைக்கிறார். கட்சி மூத்தவர்கள் அவருக்கு பெரிய குழி தோண்டி வருகின்றனர், என்று விமர்சனம் செய்து இருந்தார்.
சரவணன் அண்ணாதுரை
திமுக செய்து தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை பிடிஆருக்கு அளித்த பதிலில், அண்ணாமலை.. உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. பிடிஆர்தான் சுயமாக உருவாக்கப்பட்ட நபர். தனது முன்னோர்கள் பெரிய நபர்களாக இருந்தாலும், அவர் சுயமாக படித்து, அறிவை பெற்றார். அந்த படிப்பறிவு மூலம் அவர் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் ஆனார். மாறாக பரம்பரை காரணமாக அல்ல. இது போன்ற லாஜிக் எல்லாம் உங்களுக்கு வாட்ஸ் ஆப் பல்கலைக்கழகத்தில் கற்றுத்தர மாட்டார்கள் என்று அண்ணாமலையை சரவணன் அண்ணாதுரை விமர்சனம் செய்துள்ளார்.