'அதுக்கு’ எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கா? ஓபிஎஸ் டீமின் அடுத்த அஸ்திரம்! வாய்ப்பில்லை ராஜா!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை இனி கட்சி ரீதியாக அசைக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கும் இந்த தருணத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும் செய்தியாளர்களை சந்திக்கும் போதிலும் ஒரு புது அஸ்திரத்தை கையில் எடுத்து வருகின்றனர். அது என்ன? என்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் பதில் என்ன? என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக சில மாதங்களில் தேர்தலை சந்தித்து கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்பதற்கான தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இதற்காகவே அவரது டெல்லி பயணம் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.
அதே நேரத்தில் பாஜக தலைமையின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தான் இருக்கிறது என கூறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தால் நிச்சயம் வரும் காலங்களில் விசுவாசமாக இருப்பேன் என்பதனை வெளி காட்டவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி தரப்புக்கு தூது சென்றிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர்
இப்படி இரு தரப்பினருமே பாஜக தலைமையை தொடர்ந்து தொடர்பு கொண்டு வரும் நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை விரைவில் நடத்துவார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள். அதே நேரத்தில் பொதுச் செயலாளர் தேர்தலில் அவர் மட்டுமே போட்டியின்றி வெற்றி பெற காய்களை நகர்த்தி வருகிறார் காரணம் கடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான்.

எடப்பாடியின் திட்டம்
அப்படி என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என பார்க்கும்போது பொதுச் செயலாளர் தேர்தலில் அவ்வளவு சீக்கிரம் யாரும் போட்டியிட முடியாது குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை போட்டியிட வைக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த புதிய வீதிகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கட்சியில் 5 ஆண்டுகளுக்கும் மேல் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும், தேர்தலில் போட்டியிட விரும்புவரை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழி வேண்டும் என விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய விதிகள்
இதற்குக் காரணம் ஓ.பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறேன் என வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 5 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் போட்டியிடுவார் என்பது தெரிந்தே 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை என விதி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் கட்சியில் ஐந்தாண்டு காலம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதிப்படி ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் போட்டியிட முடியாது. இந்த நிலையில் தான் தோல்வி பயம் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி இது போன்ற புதிய விதிகளை வகுத்திருப்பதாக கூறும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முழுக்க முழுக்க தொண்டர்களின் ஆதரவு ஓ பன்னீர் செல்வத்துக்கு தான் இருக்கிறது என்கின்றனர்.

புதிய அஸ்திரம்
கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி சமூக வலைதளங்களில் அல்லது செய்தியாளர்களை சந்திக்கும் போது தொண்டர்கள் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு தான் உள்ளது என அடிக்கடி குறிப்பிட்டு பேசி வருகின்றனர். பொதுச் செயலாளர் தேர்தலில் சந்திக்கும் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இருந்தால் ஓ.பன்னீர் செல்வத்தையும் போட்டியிட வைக்க வேண்டும். அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெறலாம் என கூறுகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் பொது செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ன முயன்றாலும் மீண்டும் அவரால் கட்சிக்குள் வர முடியாது என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள். தற்போது டெல்லி தரப்பை இருவரும் அணுகியிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அடிமட்ட தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications