காதில் சொன்ன ஸ்டாலின்! 8 நிமிடத்தில் எல்லாம் ரெடி! துரைமுருகனின் அதிரடி.. சட்டசபையில் நடந்தது என்ன?
சென்னை: நேற்று ஆளுநர் ஆர். என் ரவி நிகழ்த்திய உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தில் அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகனின் பங்கும் உள்ளது. இந்த தீர்மானத்தை அவசரமாக தயார் செய்ததில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியின் நேற்றைய உரைக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுனர் ஆர். என் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.

தமிழ்நாடு
ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதைதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் ஆர். என் ரவி பேசாமல் தவிர்த்து இருக்கிறார்.
.

ஆளுநர் ரவி
நேற்று ஆளுநர் இந்த வார்த்தைகளை பேசாமல் தவிர்த்த போதே முதல்வர் ஸ்டாலின் அதை திரையில் நோட் செய்துள்ளார். முன்னால் இருந்த டேப்லெட்டில் அதை பார்த்துள்ளார். அதோடு அமைச்சர்கள் சிலரும் இதை கவனித்து உள்ளனர். முக்கியமாக அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் இதை கவனித்து உள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனே திரும்பி துரைமுருகன் காதில் கிசு கிசுத்துள்ளார். ஆளுநர் உரையை மாற்றி வாசிப்பதாக இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் அதன்பி 2-3 நிமிடங்கள் சிறிய மீட்டிங் ஒன்றை வெளியே நடத்தி உள்ளனர். அந்த மீட்டிங்கில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் இருந்துள்ளார்

முதல்வர் ஸ்டாலின்
அப்போது துரைமுருகன்தான் சட்டசபை விதி 17ஐ தளர்த்தலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை விதி எண் 17 என்ன சொல்கிறது என்றால் ஆளுநர் உரை நிகழ்த்தும் முன்பும், பின்பும், உரை நிகழ்த்தும் போதும் அவரின் செயலுக்கு இடையூறு இருக்க கூடாது. அவருக்கு இடையூறாக செயல்பட கூடாது. அவர் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை அவரின் செயலுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று விதி சொல்கிறது. இந்த விதி சபாநாயகருக்கும் பொருந்தும், முதல்வருக்கும் பொருந்தும். இந்த விதியை தளர்த்துவிட்டு, ஆளுநர் பேசியத்தையே அவை குறிப்பில் இருந்து தூக்க சொல்லலாம் என்று துரைமுருகனும் இந்த மீட்டிங்கில் ஆலோசனை வழங்கி உள்ளார்.

துரைமுருகன்
அதன்பின் ஆளுநர் தனது உரையை முழுமையாக முடிக்கும் முன் 8 நிமிடத்தில் இந்த எதிர்ப்பு தீர்மானம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த 8 நிமிடத்தில்தான் சட்ட விதிகளை எல்லாம் ஆராய்ந்து முறையான வார்த்தைகளுடன் தீர்மானம் உருவாக்கப்பட்டது.சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் ஆங்கில உரையின் தமிழ் உரையை வாசித்த பின் உடனே முதல்வர் ஸ்டாலின் எழுந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். விதி எண் 17 ஐ தளர்த்திவிட்டு, இந்த தீர்மானத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கோரினார். அவரின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு, தீர்மானத்தை அனுமதித்த நிலையில், அந்த தீர்மானம் வெற்றியும் பெற்றது. அதோடு ஆளுநர் பேசிய உரையும் நீக்கப்பட்டு தமிழ்நாடு அரசு தயாரித்த உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications