விஜயகாந்துக்கு என்னாச்சு? தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா? விஜயபிரபாகரன் ஏன் அப்படி சொன்னார்?
விஜயகாந்த் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா? என்பதுதான் இப்போதைக்கு தேமுதிக தொண்டர்களிடம் எழுந்துள்ள கேள்வி. அதற்கு காரணமே அவரது மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ள பேச்சுக்கள்தான்.
சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்? எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று தேமுதிக நிர்வாகிகளிடையே பேச்சு எழுந்தாலும் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் அவர் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தேமுதிக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. அதற்கு காரணமே விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியிருப்பதுதான்.
தேமுதிகவை கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கிய நாள் முதல் விஜயகாந்த் என்ற தலைவரை நம்பித்தான் கட்சி இருந்தது. விஜயகாந்த் என்ற ஆளுமையை நம்பித்தான் மக்கள் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வாக்களித்தனர்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் விஜயகாந்த் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்தார். கம்பீரமான பேச்சு, வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்களுக்கு பிடித்துப்போகவே வாக்குகள் கணிசமான அளவிற்கு விஜயகாந்துக்கு கிடைத்தன.
சட்டசபையில் விஜயகாந்த்
கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமைகள் தமிழக அரசியலில் இருந்த போதே அரசியல் கட்சியைத் தொடங்கி தனக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்று நிரூபித்தவர் விஜயகாந்த். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தி்ன் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக களம் கண்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்று, தேமுதிகவின் பிரதிநிதியாக, தனியொருவராக சட்டசபைக்கு சென்றார் விஜயகாந்த்.
வாக்கு சதவிகிதம்
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும், தேமுதிக தனித்தே போட்டியிட்டது. அந்தத் தேர்தலிலும் தேமுதிக வேட்பாளர்கள் யாரும் வெற்றிப் பெறவில்லையென்றாலும், 10 சதவிகித வாக்குகளை பெற்று அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் விஜயகாந்த்.
எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்து
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக -தேமுதிக கூட்டணி உருவானது. விஜயகாந்த்தை அழைத்து தேமுதிகவுக்கு 41 இடங்களை அள்ளிக் கொடுததார் ஜெயலலிதா. அதுவே அவருக்கு சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.
கர்ஜித்த விஜயகாந்த்
2005ஆம் ஆண்டில் கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகி, ஸ்டாலினை முந்தினார் விஜயகாந்த். அதிமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் சட்டசபையில் ஆளுங்கட்சியையும், முதல்வரின் செயல்பாடுகளையும் விமர்சிக்க தயங்கவில்லை. இதுவே கூட்டணி முறிய காரணமானது. சட்டசபையில் விஜயகாந்த் நாக்கைத்துறுத்தி பேசிய பேச்சுக்கள் இன்றைக்கும் வைரலாகிறது.
என்ன ஆச்சு விஜயகாந்த்துக்கு
கடந்த 2016ஆம் ஆண்டு விஜயகாந்த் மூன்றாவது அணியின் தலைவராக முதல்வர் வேட்பாளராக களம் கண்டார். மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாத காரணம் அவரது உடல் நல பிரச்சினைதான். அவரால் தேர்தல் பிரச்சாரத்தில் கூட சரியாக பேச முடியாமல் போனது.
சைகையில் சொல்லும் விஜயகாந்த்
சமீபகாலமாகவே விஜயகாந்த் ஏதாவது ஒரு விழாவில் தலையை காட்டினாலும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், அவரது மகன் விஜயபிரபாகரனும்தான் அதிகம் பேசுகின்றனர். விஜயகாந்த் சைகையில் ஏதாவது சொன்னால் அதை பிரேமலதா விளக்கம் தருவார்.
பிரச்சார வேனில் விஜயகாந்த்
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தேமுதிக கொடி நாளில் கொடியேற்றி வைத்த விஜயகாந்த், பிரச்சார வேனில் ஏறி தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயார் என்பது போல காட்சி அளித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அன்றைய தினம் மைக் பிடித்தாலும் அதிகமாக பேசவில்லை. விஜயகாந்தை வேனில் பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
பிரச்சாரத்திற்கு வருவாரா?
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்காக தேமுதிக அதிமுக கூட்டணி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் பேசியுள்ள விஜயபிரபாகரன், தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம் என்று கூறியுள்ளார். தேமுதிக நினைத்தால் 234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என பெரம்பலூரில் பேசினார். உடல்ரீதியாக விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டுவர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கம்பீர குரலை கேட்க முடியாதா?
விஜயகாந்தின் குரலில் ஒரு கம்பீரம் இருக்கும். பக்கம் பக்கமாக வசனம் எழுதிக்கொடுத்தாலும் அதை கச்சிதமாக தனக்கே உரிய மதுரை தமிழில் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கி விடுவார். கடந்த சில ஆண்டுகாலமாகவே விஜயகாந்தின் கம்பீர குரலை கேட்க முடியவில்லை என்ற கவலை ரசிகர்களிடம் உள்ளது. எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து ஜெயித்தது போல விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வராமலேயே ஜெயித்து விடுவார் என்று கூறியுள்ளார் அவரது மகன் விஜய பிரபாகரன். இன்றைய வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை எந்த அரசியல் தலைவர்களாலும் கணிக்க முடியாது என்பதுதான் உண்மை.