ஆறுமுகசாமி அறிக்கையின் மீது நெக்ஸ்ட் ஆக்ஷன் என்ன? ‘வாக்குமூலம்’.. சட்ட அமைச்சர் சொன்ன பரபர தகவல்!
சென்னை : ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விசாரணை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டவர்களிடம் முதலில் விசாரணை செய்யப்படும் என்றும், அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசு அதிரடி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனையைப் பெற்று சசிகலா, உறவினரான டாக்டர் சிவகுமார், சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ், சுகாதாரத்துறைசெயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலம் பெற்று நடவடிக்கை
இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் சுமத்தி இருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். ஆறுமுகசாமி அறிக்கையில் விசாரணை செய்ய வேண்டும் என கூறியவர்களிடம் முதலில் விசாரணை செய்யப்படும். அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்காக பயன்படுத்துகிறோமா?
மேலும் பேசிய அவர், "இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க முழுக்க முன்னாள் முதலமைச்சர் இறப்பில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். இந்த ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் என்பது எல்லாராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக ஆணித்தரமாக இந்த ஆணையத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் கட்டுப்பாட்டில்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கட்டுப்பாடுகள் அனைத்தும் யாரிடம் இருந்தது என்று அந்த ஆணையம் முழுமையாக கூறியுள்ளது. ஒரு அமைச்சரை தவிர அதில் யாருக்கும் தொடர்பு கிடையாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையில் அறை எடுத்து தங்கி இருந்த குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் இந்த அறிக்கையை வரவேற்க மாட்டார் தான்.

கிரிமினல் வழக்கு?
பொறுப்பு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய பல்வேறு கட்சியினர் இந்த விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எடுத்துரைத்தனர். துறை ரீதியாக பரிசீலித்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications