தேர்தல் முடிந்ததும்.. மாநிலக் கட்சிகளின் டார்கெட் யாராக இருக்கும்.. மோடியா இல்லை பாஜகவா?
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய சூழலில் மாநிலக் கட்சிகளின் எதிர்ப்பு எதை நோக்கி திரும்பும் பாஜகவை நோக்கியா அல்லது மோடியை நோக்கியா
நடந்து வரும் மக்களவை தேர்தலின் முடிவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற கேள்விதான் இந்திய அரசியல் வட்டாரத்தில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தேர்தலுக்கு முன்னர் வந்த அத்தனை கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ், பாஜக என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதையே கூறிவந்தன. இந்த நிலையில் 5 கட்ட மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில் நாடு முழுவுதும் வாக்களர்களின் மன நிலையை அறிந்த பலவேறு கட்சிகளின் தலைவர்களும் காங்கிரசுக்கோ அல்லது பாஜகவுக்கோ பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறி வருகின்றனர். இதிலும் ஒரு சாரார் இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும் பாஜக காங்கிரசை விட அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறி வருகிறார்கள்.
கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக 282 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால் இம்முறை 80 முதல் 120 இடங்கள் வரை குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதை பாஜக கூட்டணி கட்சியினர் கூட இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.
மேற்குவங்கத்தில் உங்களால் பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது.. மமதா வார்னிங்!
ஆட்சியை இழக்க பாஜக விரும்பாது
அப்படி ஒருவேளை பாஜக குறைவான இடங்களையே பெறுகின்ற பட்சத்தில் ஆட்சியை இழக்க பாஜக விரும்பாது. அதே வேளையில் இப்போதே பிரதமர் மோடிக்கு கட்சிக்குள்ளும், மாநிலங்களில் உள்ள பிற கட்சிகளுக்கு இடையேயும் கடும் எதிர்ப்பு உள்ளது. அதாவது கடந்த தேர்தலில் பாஜகவின் முகமாக முன்னிறுத்தப் பட்ட மோடி இப்போது கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். பாஜகவின் ஆணிவேரான ஆர் எஸ் எஸ் -சும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அடுத்த பிரதமர் வேட்பாளாராக நிறுத்தலாம் என்று யோசித்து வருகிறது.
மோடி மீது அதிகரிக்கும் அதிருப்தி
இந்த நிலையில் பாஜகவோடு இப்போது கூட்டணியில் உள்ள சிவசேனாவுக்கும் மோடி மீதும், அமித்ஷா மீதும் அதிருப்தி நிலவுவது கண்கூடாக தெரிகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்த சிவசேனா கூட்டணியில் யார் அதிக இடங்களை பெற்றாலும் முதல்வர் பதவி தங்களுக்கே என்று பிடிவாதம் பிடித்தது. இதை பிடிக்காத அமித்ஷாவும் மோடியும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. தற்போது மீண்டும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறார்கள்.
கட்கரிக்கு அதிகரிக்கும் வாய்ப்பு
இந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்டாலும் உடனடியாக வரவிருக்கின்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா மீண்டும் முதல்வர் பதவியை கேட்டு அடம்பிடிக்கும். அதே வேளையில் மோடியும் அமித்ஷாவும் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் மிதவாத கொள்கை கொண்ட நிதின் கட்கரியை பிரதமர் பதவிக்கு கொண்டுவர ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு சிவசேனாவே அழுத்தம் கொடுக்கலாம்.
நிதீஷ் குமாரும் எதிர்க்கலாம்
பீகாரை பொருத்தமட்டில் மோடி பிரதமர் வேட்பாளர் என்பதாலேயே கூட்டணியில் இருந்து வெளியேறினார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். அதன் பின்னர் லாலுப் பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தவர் பின்னர் மீண்டும் லாலுவை கழட்டி விட்டுவிட்டு பாஜகவுடன் கை கோர்த்துக் கொண்டார். நிலைமை இப்படி நீடிக்கையில் நடைபெறுகின்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் நிதிஷ் குமாரும் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்க நேரிடும்.
நவீன் பட்நாயக்
பாஜக கூட்டணியில் இல்லையென்றாலும் இப்போது ஓரளவுக்கு பாஜக ஆதரவு மனநிலையில் உள்ள நவீன் பட்நாயக், தெலுங்கான முதல்வர் சந்திர சேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் பாஜக அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க பல்வேறு நிபந்தனைகளை விதிப்பார்கள். அதில் ஒன்று மோடியை மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக ராஜ்நாத்சிங் அல்லது நிதின் கட்கரி போன்ற யாரையாவது பிரதமர் ஆக்குவதற்கு ஆதரவளிக்கலாம்.
தீவிர ஹிந்துத்வா மோடி
இந்த நிலையில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், நாட்டின் பிரதமராக, நிதின் கட்கரி தான் தேர்வு செய்யப்படுவார் என, மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரபல தலித் தலைவர், பிரகாஷ் அம்பேத்கர் ஏற்கனவே கூறியிருந்தார். மோடியின் தீவிர ஹிந்துத்துவா போக்கை யாரும் ஆதரிக்கவில்லை என்பதால் மிதவாத ஹிந்துத்துவா போக்கை கடைபிடிக்கும் நிதின் கட்கரியைத்தான் ஆர் எஸ் எஸ் -சும் ஆதரிக்கும் என்று பிரகாஷ் அம்பேத்கார் கூறியிருந்தார்.
ஆட்சி அதிகாரத்தை கைவிட எண்ணாத பாஜகவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் கூட்டணி கட்சிகளின் இந்த முடிவை ஏற்க தயங்காது. அப்படி தயங்கினால் கர்நாடகாவில் பெரிய கட்சியாக வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கூட்டணியிடம் ஆட்சியை இழந்ததைபோல ஆட்சியை இழக்க நேரிடும் என்பதை பாஜக நன்கு உணர்ந்தே உள்ளது.
திமுக நிலைப்பாடு
இறுதியாக பாஜகவுக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவு செல்வதற்கு வாய்ப்பு இரு பிரதான கட்சிகளிடம் இருந்து இருப்பதாகவே இப்போது இருக்கின்ற சூழல்கள் கூறுகின்றன. அதாவது பாஜகவோடு இப்போது அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இருக்கும் அதிமுக மக்களவை தேர்தலில் வென்றால் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் என்பது தெரிந்த கதை. அதே வேளையில் திமுகவின் ஆதரவு பாஜகவுக்கு தேவை என்ற சூழலில் திமுக பாஜகவை ஆதரிக்காது என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்ய முடியாது. அப்படி ஒரு வேளை திமுக ஆதரவளிக்க வேண்டிய சூழல் வந்தால் மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மீது சுமத்த விரும்பவில்லை என்று திமுக கூறுவதோடு மோடிக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமர் ஆக்குவதென்றால் தங்களது பரிபூரண ஆதரவை அளிக்கவும் தயங்காது. ஆக 23 ம் தேதிக்கு பிறகு அரசியல் சதுரங்கத்தில் எந்த காய் எதை நோக்கி வேண்டும் என்றாலும் நகரலாம்.