மாறும் ரூட்.. 2024ல் அதிமுகவுக்கு கல்தா? டெல்லியின் வலுவான "சாணக்கிய வியூகம்"? நடக்குமா?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக அண்மைக்காலமாக பெரும்பாலான மாநிலங்களில் அந்த மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு சில இடங்களை வென்று தனது காலடியை பதித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதுண்டு.
தமிழகத்தில் ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே பாஜக வரவில்லை (வாஜ்பாய் அரசு கவிழ்ப்புக்கு பிறகு). ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரானதும் நிலைமையே தலைகீழாக மாறியது.
உஷாரா இருக்கனும்.. சொந்த ஊருக்கே போன ஓபிஎஸ்! ஸ்லீப்பர் செல்களை களமிறக்கிய எடப்பாடி? பரபர தேனி..!
2019 ஆம் ஆண்டு கூட்டணி
ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பாஜகவுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைத்தனர். இந்த கூட்டணி 2021 சட்டசபை தேர்தல் வரை தொடர்ந்தது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கும் இடங்களை கேட்டு பெற்ற பாஜக அந்த இடங்களில் 4-இல் வென்றதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் அதிமுக கூட்டணியில் இல்லாமல் பாஜக தனித்து போட்டியிட்டது. எனினும் கணிசமான இடங்களை வென்றதால் பாஜகவுக்கு தமிழகத்தின் நிலை குறித்து ஒரு நம்பிக்கை பிறந்தது. இந்த நிலையில் அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிரச்சினையை வைத்து தமிழகத்தில் திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தலையீடு
கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தலையிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்து பன்னீருக்கு துணை முதல்வர் பதவியை பெற்று தந்தது. அது போல் இந்த முறை அதிமுகவின் இரு தலைவர்களும் பிரதமரையும் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கப்படவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்கு சென்னை வந்த போதுகூட அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களே நேரம் கொடுக்கப்பட்டன. ஆனால் தனியாக பேச நேரம் ஒதுக்கப்படவில்லை.
மூத்த பத்திரிகையாளர்
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில் அதிமுக பிரச்சினையில் இந்த முறை பாஜக தலையிடாததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 2024 இல்தான் தேர்தல் வருகிறது. ஆனால் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் தேர்தல் வருகிறது. இதனால் அதிமுகவுக்கு பஞ்சாயத்து செய்தால் தேர்தல் பிரச்சாரங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால் அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிடாமல் உள்ளது.
பன்னீர் எடப்பாடி
மேலும் பன்னீரையும் எடப்பாடியையும் இப்போது இல்லாவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் ஒன்று சேர்த்துவிடலாம். தேர்தல் நேரத்தில் இவர்களை ஒன்று சேர்ப்பதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற திட்டமிட்டிருப்பது. இதை ஏற்கெனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே 2024 ஆம் ஆண்டு ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் சேர்த்து ஒன்றுபட்ட அதிமுகவை செயல்பட வைத்து இரட்டை இலைக்கான வாக்குகளை தங்கள் பக்கம் அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
தமிழக பாஜக தலைமையில் மூன்றாவது அணி
அதிமுகவில் இரட்டை தலைமையையே பாஜக விரும்புகிறது. ஒருவர் தலைமையில் அதிமுக சென்றால் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க முடியாது என்பதை பாஜக கருதுகிறது. இதனால் ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் கடந்த 2017 போல் இணைத்து வைக்கவே பாஜக முயற்சிக்கும் என்றார் ப்ரியன். ஒரு வேளை பன்னீரும் எடப்பாடியும் ஒன்று சேர மறுத்தால், தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என அரசியல் நோக்காளர்களிடம் நாம் கேட்டோம். அதற்கு அவர்கள், அதிமுகவை ஒன்றிணைக்க தற்போது பாஜக ஆர்வம் காட்டாததற்கு காரணமே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவுக்கு அடுத்த கட்சியாக வளர வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளது.
ஸ்டிராங்கான கட்சி
எனவே இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் இப்போதே தமிழகத்தில் ஸ்டிராங்காக அதாவது திராவிடக் கட்சிகள் போல் காலூன்ற பாஜக திட்டமிட்டுள்ளது. சென்னை வந்த பிரதமர் மோடியும் பாஜக நிர்வாகிகள் சந்திப்பில் இப்போதே களப்பணியாற்றுங்கள், எப்படியாவது தமிழகத்தில் பரிய அளவில் உருவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாராம்.
Recommended Video
2024 இல் என்ன நடக்கும்
எனவே 2024 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் பாஜக தங்களை வலுமையான கட்சியாக மாற்ற போராடும். ஒரு வேளை தோற்றால் அதிமுகவுடன் இணைந்து தேர்தல் சந்திப்பர். இல்லாவிட்டால் அதிமுகவை கண்டும் காணாமல் விட்டுவிட்டு தங்கள் தலைமையில் ஒரு அணியை உருவாக்குவர். அதாவது திமுக கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, பாஜக தலைமையில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. தேமுதிக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை இணைத்து பாஜக தலைமையில் ஒரு அணி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.