தோனி இருக்கட்டுமே ப்ளீஸ்.. கங்குலியிடம் 10 நாட்கள் கெஞ்சி வாங்கிய சான்ஸ்.. சீக்ரெட்டை சொன்ன பிரபலம்
சென்னை: சிஎஸ்கே அணி கேப்டன் தோனி இப்போது உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்ற புகழுக்குச் சொந்தக்காரராக இருக்கலாம். ஆனால், அவருக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம், கிரன் மோரே, 10 நாட்கள் வாதம் செய்து, கெஞ்சி, கூத்தாடி, வாய்ப்பு பெற்றுத் தந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
3 வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் கேப்டன் தோனி. 2007ம் ஆண்டு, டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது, 2011ம் ஆண்டு, 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. 2009ல் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஐசிசி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்த அனைத்து சாதனைகளும், தோனி கேப்டனாக இருந்தபோதுதான் நடந்தன. அதேநேரம், தோனி இந்திய அணிக்குள் அவ்வளவு எளிதாக நுழைந்து விடவில்லை.
வேலையை ஆரம்பித்த தோனி.. சிஎஸ்கே ஹோட்டலுக்கு வந்த பிசிசிஐ ஸ்பெஷல் டீம்.. என்ன நடக்கிறது? பிளான்?
ஜார்கண்ட் வீரர்
இந்திய அணிக்குள் இடம் கிடைப்பதற்கு முன்னால், பல வருடங்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில்தான் ஆடி வந்தார் தோனி. ஜார்கண்ட் மாநிலத்திற்காக விளையாடிய தோனிக்கு, துலிப் டிராபி அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. 2004ம் ஆண்டு துலிப் டிராபி பைனலின்போது, கிழக்கு மண்டல அணிக்கான விக்கெட் கீப்பர் ஆப்ஷனில் தோனியும் இருந்தார். ஆனால் கங்குலி, அந்த அணிக்கு தீப் தாஸ்குப்தாதான் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், இறுதியாக கங்குலி தனது முடிவை மாற்றினார். இதன் பின்னணியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிரன் மோரே இருந்துள்ளார்.
விக்கெட் கீப்பராக ராகுல் டிராவிட்
கிரண் மோரே இதுகுறித்து, ஒரு பேட்டியின்போது தெரிவித்தார். 10 நாட்கள் கங்குலியிடம் வாதம் செய்து விளக்கம் கொடுத்து கங்குலியை சம்மதிக்க வைத்ததாக கிரண் மோரே கூறியுள்ளார். "ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அதிலும் நன்கு பவர் ஹிட் அடிக்க கூடியவராக எங்களுக்கு அப்போது தேவைப்பட்டது. 6 அல்லது 7வது இடத்தில் களமிறங்கி, விரைவாக 40 முதல் 50 ரன்களை சேர்க்க கூடியவராக அவர் இருக்க வேண்டும். இந்திய முன்னணி வீரர் ராகுல் டிராவிட் 75 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராகவும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. 2003 உலக கோப்பை தொடர் முழுக்க ராகுல் டிராவிட்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். எனவே விக்கெட் கீப்பிங்கில் தனித்துவம் பெற்ற ஒரு பேட்ஸ்மேன் தேவை என்று தேடிக் கொண்டிருந்தோம்.
தோனி அதிரடி
அப்போதுதான், எனது நண்பர் தோனி ஆட்டம் பற்றி கூறினார். இதற்காகவே நான் விமானத்தில் கிளம்பிச் சென்று ஒரு போட்டியை பார்த்தேன். அதில், அணி மொத்தமே 170 ரன்கள் அடித்திருந்தது. தோனி மட்டும் 130 ரன்கள் விளாசினார். எந்த ஒரு பவுலரையும் தோனி விட்டு வைக்கவில்லை. விட்டு விளாசினார். இதை பார்த்ததுமே, இவர்தான் பைலனலில் விக்கெட் கீப்பராக களமிறங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதன்பிறகு கங்குலி மற்றும் தீப் தாஸ்குப்தாவோடு நிறைய ஆலோசனை செய்தேன். 10 நாட்கள் தொடர்ந்து கங்குலியிடம் நான் வற்புறுத்திய பிறகு, தாஸ்குப்தாவிற்கு பதில், தோனி விக்கெட் கீப்பராக களம் கண்டார்.
யுவராஜ் சிங் சதம்
தினேஷ் மோங்கியா தலைமையிலான வடக்கு மண்டலம் அணியும், தேவங்க் காந்தி தலைமையிலான கிழக்கு மண்டலமும் பைனல் போட்டியில் மோதின. யுவராஜ் சிங்கின் சதம் காரணமாக வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 330 ரன்கள் குவித்தது. தோனி மற்றும் சிவ் சுந்தர் தாஸ் கிழக்கு மண்டலத்திற்காக ஓப்பனிங்கில் இறங்கினர். தோனி, 26 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். வடக்கு மண்டலம் தனது 2வது இன்னிங்சில் 409 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. யுவராஜ் சிங் 148 ரன்கள் அடித்தது இந்த இமாலய இலக்கு ஏற்பட காரணமாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்சில் தோனி 60 ரன்கள் அடித்தார். 59 ரன்கள் வித்தியாசத்தில் வடக்கு மண்டலம் வெற்றி பெற்றது.
Recommended Video
தோனியும், கங்குலியும்
2004ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த போட்டி நடைபெற்றது. அதே வருடம், டிசம்பர் மாதம், வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணிக்காக முதல் முறையாக களம் இறங்கினார் தோனி. 2005 டிசம்பர் மாதம், இந்தியாவிற்காக முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 2008ம் ஆண்டு தோனி இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கியபோது, அந்த அணியில் கங்குலி இடம் பெற்றிருந்தார். அதுதான் கங்குலியின் கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டாகும். பிறகு ஓய்வு முடிவை அறிவித்தார் கங்குலி. தற்போது இந்திய டி20 கிரிக்கெட் அணியின் மென்டராக தோனி வளர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி பதவி வகித்து வருகிறார். தோனியை இந்த பதவிக்கு தேர்ந்தெடுத்ததில் கங்குலிக்கும் அதிக பங்கு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.